வளர்ந்து வரும் அதிசயக்கல் யாழ் தீவகம் நெடுந்தீவில் ,உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!!!

யாழ் தீவகத்திற்கு வரும் உல்லாசப்பயணிகளில் பெரும்பாலானவர்கள் நெடுந்தீவிற்குச் சென்றே திரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையும்-தற்போது  நெடுந்தீவின் மீது முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில், தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட-இத்தீவில், விவசாயம்,கால்நடை வளர்ப்பு,கடற்றொழில் என்பன மக்களால்  செய்யப்படும் முக்கிய தொழில்களாகும்.

நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல.
இத்தீவினை “மருந்து மாமலை வனம்” எனப் போற்றி பெருமிதம் கொண்டான் மன்னன் செகராசசேகரன். போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் என்னும் மன்னன்  நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.
மேலும் இலங்கையின் வடபகுதியில்,குதிரைகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் இடமாக நெடுந்தீவே அமைந்துள்ளது.

இங்கு   அதிசயக்கல் ஒன்று வளர்ந்து வருவதனை   உல்லாசப்பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட-நெடுந்தீவினை முழுமையான  உல்லாசப் பகுதியாக மாற்ற-விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.









நன்றி: allaiyoor.com இணையம்