எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தமிழர் : ஊட்டியில் மக்கள் வரவேற்பு!!!

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், ஏறிய முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராணுவத்தில் பணியாற்றும் ஊட்டியைச் சேர்ந்த கே.சிவகுமார்.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட்-2 படைப் பிரிவில் ஹவில்தாரராகப் பணியாற்றி வருகிறார்.

இந்திய ராணுவக் குழு சார்பில் எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற குழுவுடன் இணைந்தார் சிவகுமார். ஏழு பேர் கொண்ட குழுவினர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான பகுதியை சென்றடைந்தனர். அவர்கள் அனைவரும் மே 21 ஆம் தேதி தங்கள் முகாமுக்கு திரும்பினர்.
சியாச்சின் மலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படையைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தது நினைவுக்கூரத்தக்கது. அந்த படையில்தான் சிவகுமாரும் பணியாற்றி வருகிறார். சியாச்சின் பனிச்சரிவைத் தொடர்ந்து சிவகுமார் அணியினர் மேற்கொண்ட எவரெஸ்ட் பயண வழியில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.
சிவகுமாருக்கு மலை ஏறுவது ஒன்றும் இது புதிதல்ல. குல்மார்க் பகுதியில் உள்ள ராணுவப் பள்ளியில் மலை ஏறுவது குறித்த பயிற்சியை கடந்த 2004 ஆம் ஆண்டு முடித்தார் சிவகுமார். பின்னர் அதே பள்ளியில் கடந்த 2008-11 வரை பயிற்றுநராகப் பணியாற்றினார்.
தொடர்ந்து  2013 ஆம் ஆண்டு முதல் அருணாசல பிரதேசத்தில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் அதுதொடர்பான விளையாட்டுப் பள்ளியில் பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார்.
எவரெஸ்ட் சென்று திரும்பிய பின்னர், ஊட்டியில் உள்ள தனது குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறியுள்ளார் சிவகுமார். முதலில் அதை நம்ப மறுத்த அவரது குடும்பத்தினர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தில் எடுத்த புகைப்படங்களைக் காட்டிய பிறகே நம்பினர்.
ஊட்டியில் சிவகுமாரின் தாய், அவரது இரு மூத்த சகோதரர்கள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். சிவகுமாருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சிவகுமாருக்கு முன்பாக இரு தமிழர்கள் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவரும் எவரெஸ்ட் சிகரம் ஏறியுள்ள நிலையில், தமிழகத்திலேயே வசிக்கும் ஒருவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலை ஏறிய சாதனையை சிவகுமார் நிகழ்த்தியுள்ளார்.