இராணுவத்தினரது உணவகங்கள், வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள்!

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வர்த்தக நிலையங்களில், பொதுமக்களும் பொருள்களை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது வியாபார நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளமையால், 

பொதுமக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம், தமிழர் தாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாகவும் - குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்கு சென்றடையும் நிலைமைகள் தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் தெளிவுற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், சிவில் நிர்வாக வெளியை வலியுறுத்தும் வகையிலும், இராணுவத்தினரது வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்வனவு செய்வதை முற்றாகத்தவிர்த்து புறக்கணிக்குமாறும் அனைத்து உறவுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. 





இதுதொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடக அறிக்கை:
15.06.2016

இராணுவத்தினரது உணவகங்கள், வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள்.

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் பலதரப்பட்ட படைப்பிரிவுகளும் உணவகங்கள், சிற்றுண்டி தேநீர்ச்சாலைகள், மரக்கறி – பழக்கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் (Multi shop), நலன்புரி நிலையங்கள் (Army Welfare Centers) இவற்றை நிறுவி, பரந்தளவில் வியாபாரம் செய்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இந்த வர்த்தக நிலையங்களில் தத்தமது படைப்பிரிவுகளின் வீரர்கள் மட்டுமல்லாமல், அண்மைக்காலமாக பொதுமக்களும் பொருள்களை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது வியாபார நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் இராணுவத்தினரின் வர்த்தக நிலையங்களில் பெருமளவில் பொருள்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர் தாயகத்தின் உறவுகளே!

அறிந்தோ அறியாமலோ இராணுவத்தினரது இத்தகைய வர்த்தக நிலையங்களில் நீங்கள் பொருள்களை கொள்வனவு செய்வதால், அவர்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால், ‘உங்களது பணம்’ சுழற்சி முறையில் இராணுவத்தினரின் பராமரிப்பு - பாதுகாப்பு உள்ளிட்ட இன்னபிற அலுவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

உங்கள் உடலை வருத்தி, வியர்வை சிந்தி, உழைத்துச்சேமித்த உங்கள் பணம், இவ்வாறு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நிலைகொண்டு உங்கள் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாகவும் - குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்கு சென்றடையும் அறியாமை நிலை கண்டு நீங்கள் தெளிவுறுதல் வேண்டும்.  

2016ம் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் 306.7 பில்லியன் ரூபாய்கள் (30 ஆயிரத்து 670 கோடி) நாட்டின் பாதுகாப்பிற்காக (பொலிஸ் மற்றும் முப்படைகளினதும் பயிற்சி – பராமரிப்பு – ஊதியத்துக்காக) ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டதை விடவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 306.7 பில்லியன் ரூபாய்கள் இலங்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதிகபட்ச ஒதுக்கீடாகும். மேலும் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 237.9 பில்லியன் ரூபாய்கள் நிதியை விடவும் பாதுகாப்பிற்காக 67வீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை கணக்கிட முடிகின்றது.  

இவ்வாறு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும்கூட, இராணுவத்தினர் உணவகங்கள், சிற்றுண்டி தேநீர்ச்சாலைகள், மரக்கறி – பழக்கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் (Multi shop), நலன்புரி நிலையங்கள் (Army Welfare Centers) போன்றவற்றை தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றார்கள் எனில், அதன் அர்த்தம் தான் என்ன? 

இவற்றால் இலாபமாக கிடைக்கப்பெறும் ஒருதொகை நிதி, இராணுவத்தினரின் பராமரிப்பு - பாதுகாப்பு உள்ளிட்ட இன்னபிற அலுவல்களுக்கு தேவைப்படுகின்றது அன்றி பயன்படுகின்றது என்று தானே பொருள்படும்.

ஆதலால் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், சிவில் நிர்வாக வெளியை வலியுறுத்தும் வகையிலும், இதன் ஒரு அங்கமாக இராணுவத்தினரது வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்வனவு செய்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழர் தாயகத்தில் சீவிக்கும் அனைத்து உறவுகளையும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆம், நம்மால் முடியும். Yes We Can!

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம், நீங்கள் எடுத்து வைக்கும் முதல் ஒரு அடியில் இருந்து தானே ஆரம்பிக்கின்றது. இந்த யதார்த்தத்துக்கு ஒப்ப நீங்கள் இப்போது நம்பிக்கையோடு சிறுகச்சிறுக காட்டும் எதிர்ப்புக்கூட நாளை விஸ்வரூபமாகி ‘தமிழர் தாயகத்தில் இராணுவ வெளியேற்றம்’ எனும் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க உதவும். கடும் தாக்கம் செலுத்தக்கூடும்.  

இதேவேளை தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள இனப்பொதுமக்களின் வர்த்தக நிலையங்களில் பொருள்களை தவறாது கொள்வனவு செய்யுமாறு தமிழர் தாயகத்தில் சீவிக்கும் அனைத்து உறவுகளையும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

நிச்சயம் உங்கள் பணம் அந்த குடும்பங்களின் அன்றாட சீவனோபாயத்தை கொண்டு நடத்துவதற்கும், அந்த குடும்பங்களின் கல்வி, சுகாதாரம், பாராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவியாக அமையும்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்.