யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர்: முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு!

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஞாபகார்த்த நிகழ்வுகள் நடைபெற்றன.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது.
யுத்தத்தின் இறுதி வடுக்களை சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
5 நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி பொதுச்சுடரினை ஏற்றினார்.
இதேவேளை, யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இன்று யாழ். கீரிமலை நகுலேஷ்வரம் சிவாலயத்தில் பூஜை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
கீரிமலை புனித தீர்த்தத்தில் பிதிர் கடன் செலுத்தப்பட்டதுடன் இதில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏழு வருடங்கள் கடந்த நிலையில், இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து யாழ். பல்கலைக்கழக சமூகமும் இன்று அஞ்சலி செலுத்தியது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி கிழக்கு மாகாண மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
வாகரை பிரதேசத்தின் மாணிக்கபுரம் பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை மனித உரிமைகள் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்குமான அமைப்பின் கேட்போர் கூடத்திலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்காக திருகோணமலை மாவட்ட ஆயர், நோயல் இமானுவேல் தலைமையில் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.
யுத்தத்தால் உயிர் நீத்தவர்களின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையிலும் இடம்பெற்றது.

நன்றி: முதன்மை செய்தி சக்தி