பட்டினிப்போட்டு கொல்வதுதான் நல்லாட்சி அரசின் லட்சணமா?

தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, சர்வதேச பெண்கள் தினமாகிய 2016 மார்ச் 08 அன்று வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி முற்றத்தில் காலையிலிருந்து மாலை 4.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்தினர்.

'விடுதலை ஒன்றே தீர்வு வேண்டாம் இங்கு ஏமாற்றுப்பேச்சு', 'பட்டினிப்போட்டு கொல்வதுதான் நல்லாட்சி அரசின் லட்சணமா?', 'அரசியல் கைதிகளுக்கு மரணப்படுக்கைதான் தீர்வா?', 'அரசியல் கைதிகளுக்கு மரணம்தான் விடுதலையா?', 'சிறைக்கதவுகளைத்திற எங்கள் உறவுகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப்போகட்டும்', 'எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு', 'இரகசிய வதைமுகாம்களை அம்பலப்படுத்து. சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்து', 'நல்லாட்சி அரசே உன் யோக்கியதை என்ன? தமிழ் தேசியக்கூட்டமைப்பே அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் என்ன?' 

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு நல்லாட்சி அரசின் முகத்திரையைக்கிழிக்கும் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.

மாலை 4.00 மணியளவில், வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ரட்ணகாந்தன் மற்றும் சிவகஜன் ஆகியோர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பேருவகையோடு பழரசம் வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுறுத்தி வைத்தனர்.