ஒரு வாரத்திற்கு கனடா நாட்டிற்கு பிரதமராக இலச்சியப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்!!


கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 16 வயதாக இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். எனினும், புற்றுநோயிற்கு பலியாவதற்கு முன்னதாக தன்னுடைய இறுதி விருப்பத்தை அந்த வயதிலேயே பதிவு செய்துள்ளார். அப்போது, ‘விலைகொடுத்து வாங்க முடியாத ஒரு இறுதி விருப்பம் எனக்குள் இருக்கிறது. இதனை வேறு யாராலும் கணிக்கவும் அல்லது இதற்கு முன்னர் வேறு யாரும் சிந்திக்காத விருப்பமாக அது இருக்கும்’.

’’ஆமாம், வரலாற்று சிறப்பு மிக்க கனடா நாட்டிற்கு நான் ஒரு கிழமைக்கு பிரதமராக செயல்பட வேண்டும்’ என தனது அதிரடி விருப்பத்தை பதிவு செய்துள்ளார். 16 வயதில் தெரிவிக்கப்பட்ட இந்த வாலிபரின் விருப்பம் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிடம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. உடனே எந்த மறுப்பும் தெரிவிக்காத பிரதமர், அரசியல் வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு வாலிபரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார். பிரதமரின் தகவலை பெற்று மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற லக்கான்பால் உடனடியாக தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிற்கு புறப்பட்டார்.
நேற்று முன் தினம் ஒட்டாவா நகரை அடைந்ததும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு உயர் பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளை சந்தித்து ‘பிரதமர் எந்த மாதியான பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கிறார்’ என்பது குறித்து தெரிந்துக்கொண்டார். இதன் பின்னர் நேற்று லக்கான்பாலை ஒரு கிழமை பிரதமராக பொறுப்புகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதன் மூலம், ஒரு புதிய பிரதமரை போல் அவருக்கு அத்தனை வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தங்கும் உயர்தர ஹோட்டல், உணவு என அனைத்தும் வழங்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று நேரில் வந்து லக்கான்பாலை சந்தித்து அவருடன் மதிய உணவை அருந்திவிட்டு உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்துள்ளார்.
மேலும், பிரதமர் ஜஸ்டினிற்கு பாதுகாப்பு வழங்கும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பிரதமர் பயணிக்கும் தனி விமானத்தில் ஏறி அதனை சுற்றிப்பார்த்து மகிழ்ந்துள்ளார். ’கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள உள்ள நிலையில், உங்களது முதல் திட்டப்பணி என்ன?’ என லக்கான்பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ’ஒரு பிரதமருக்கு இருக்கும் அனைத்து பணிகளில், பொருளாதாரத்தை உயர்த்துவது தான் அவசியமாக இருக்கும். எனவே இது தான் என முதல் பணியாக இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பற்றி கேள்வி எழுப்பியபோது, ‘நமது பிரதமரை போல் ஒரு சுறுசுறுப்பான நபரை நான் இதுவரை பார்த்தது இல்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தால் எவ்வளவு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை நான் நேரிலேயே அவரிடம் பார்த்து வியந்து விட்டேன்’ என உற்சாகமாக லக்கான்பால் பதிலளித்துள்ளார்.