தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகளின் முதல் கட்ட உதவிகள்!

பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் மக்களை மையமாகக் கொண்ட பல பொது பணி அமைப்புக்களினால் முதன் முறையாக ஒன்றிணைந்து, தாய்த் தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாம் கட்ட நிவாரணப் பணி நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.


பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியம், நம்பிக்கை ஒளி, THE YOUTH PROJECT, SERENDIP CHILDREN'S HOME, LOTUS CARING HANDS, ஒத்துழைப்பு, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (ஐ.இ), பிரித்தானிய தமிழ் கொன்சவேற்றிவ், தொழில் கட்சிக்கான தமிழர் மற்றும்  ஹில்லிங்டன் தமிழ் சமூக நிலையம் என்பன இணைந்து கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் மிகப் பெரிய அழிவினை ஏற்படுத்திய மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதலாம் கட்ட உதவியாக கடலூர் மாவட்டத்தின் மிகவும் பாதிக்கபட்ட விசூர் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மனிதாபிமானப் பணிக்கான இக் கூட்டு அமைப்புக்களின் சார்பாக பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் திரு.கோபால், பிரித்தானிய தமிழர் பேரவையின் திரு.சகாதேவன், மற்றும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா ஆகியோரினால் நேரடியாக உடனடித்  தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

விசூர் கிராமம் மையப்பகுதியில் 196 மண்ணெண்ணை அடுப்புகளும், விசூர் கிராமம் காலனி பகுதியில் 300 மண்ணெண்ணை அடுப்புகள்,மற்றும் 300 பாத்திரங்களும்,  விசூர் கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் 120 புத்தகப் பைகள், 120 பாத்திரங்கள், மற்றும் 120 கம்பளிகளும்,  குடியிருப்பு பகுதியில் 150 புத்தகப் பைகள், 150 பாத்திரங்கள், 150 கம்பளிகளும், பெரியகாட்டுபாளையம் பகுதியில் 120 புத்தகப் பைகள், 120 பாத்திரங்கள், 120 கம்பளிகளும், பெரியிருப்பு பகுதியில் 120 பாத்திரங்களும் வழங்கப்பட்டன.


மேலும் இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதுடன் தமிழக ஊடகங்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டன. தொடர்ந்து இவ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிற்கும், மற்றும் சென்னை, காஞ்சிபுரம் போன்ற பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் இவ் உதவிகள் வழங்கப்பட இருப்பதாக இவ் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. இந்நிகழ்வுக்குரிய காலமும், இடமும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/0Bw8NHfgkqaH0TkxGNnhCRWVuQTRXb1ZRamlVRVl0SmQtQW5j/view?usp=sharing

அதேவேளை குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட இவ் வெள்ள நிவாரண பணிக்கு முழுமையான ஆதரவை வழங்கிய பிரித்தானியா  வர்த்தக நிலையங்கள், சங்கங்கள், ஆலயங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கிய தனிப்பட்ட நபர்கள், மற்றும் நிதியைச் சேகரிப்பதற்கு உதவிய அனைத்து அமைப்புகளின் தொண்டர்களுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான ஒருங்கிணைந்த மனிதாபிமானப் பணிகள் தொடர்வதற்கு அனைத்து பிரித்தானிய தமிழ் மக்களின் ஆதரவும் நேரடிப் பங்களிப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஜனவரி முதலாம் திகதியுடன் பிரித்தானியாவில் தமிழக வெள்ள நிவாரணப் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுடன் அது குறித்த மேலதிக தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக அறியத் தரப்படும்.