விடாத மழை.. தத்தளிக்கும் சென்னை- படங்கள் !

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல நாட்க்களாக முற்றிலும் முடங்கியுள்ளது. மழையின் காரணமாக அத்தியவாசிய பொருட்களின் விலை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் துண்டிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நேற்று மதியம் முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 
இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, நந்தம்பாக்கம், சூளைமேடு, ராமபுரம், நுங்கம்பாக்கம், மேதா நகர், கில் நகர், போரூர், வடபழநி, கோட்டூர்புரம் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின.இதனால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பால், தண்ணீர் விலை உயர்வு: சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
   
பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரை லிட்டர் பால் விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 50, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 20 லிட்டர் தண்ணீர் கேன் சாதாரண நாட்களில் ரூ.30 க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது  
ஏடிஎம் முடக்கம்: சென்னை நகரின் பல பகுதிகளில் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளின் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பலர் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். பெட்ரோல் தட்டுப்பாடு: சென்னையில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளாகியுள்ள மக்கள், தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக முடக்கம்: சென்னையில் தொடந்து பெய்த கனமழைக்கு நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ஏரி,குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் நேற்று இரவு முழுவதும் உறக்கமின்றி ஆங்காங்கே சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இரண்டாவது நாளாக இன்றும் வெள்ள நீர் வடியாததால் உணவு ,மருந்து இல்லாமல் பலர் பெரும் சிரமத்தால் தவித்து வருகின்றன.


இந்த நிலையில் இன்னும் 72 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
































நன்றி:
தகவல்,
தட்ஸ்தமிழ்  மற்றும் நியூஸ் 7 தமிழ்.