அமைச்சர் மனோ.கணேசன் - வவுனியா பிரஜைகள் குழு பிரத்தியேக சந்திப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணம் உள்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர் மனோ.கணேசன் அவர்களும் - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலும், புதிய ஆட்சி மாற்றச்சூழலிலும் சிவில் சமுக மனித உரிமை சார்பு பணிகளில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் சந்தித்த, சந்தித்துவரும் ஆபத்துகள் - சவால்கள் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், அவற்றை நிவர்த்திசெய்து எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் அக்கறை செலுத்தினார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 19.11.2015 அன்று பிரத்தியேகமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், அமைச்சர் அவர்களுடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் திரு.பாஸ்கரா அவர்களும், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பிரியாணி குணசேகர அவர்களும் உடனிருந்தனர். 

பிரஜைகள் குழுவின் சார்பில் தலைவர் கி.தேவராசா, செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம்-சேகுவேரா, பொருளாளர் கோ.ராஜா, நகரப்பகுதி இணைப்பாளர் வி.புவிகரன், வவுனியா தெற்கு பிரதேச இணைப்பாளர் தி.உதயன், செயல்குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் சங்கத்தின் தலைவியுமாகிய திருமதி ஜெயவனிதா ஆகியோர் கலந்துகொண்டனர். 

கடந்த காலங்களில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டுக்காக திரு.மனோ.கணேசன் அவர்கள் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரது ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியினர் பிரஜைகள் குழுவினரின் செயல்பாடுகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காகவும் அமைச்சர் அவர்களை, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் பாராட்டி மதிப்பளித்தனர்.