மரம் நடுகை மாதம் - மரநடுகையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மர நடுகை தொடக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் செம்மணி உப்பாற்றங்கரையில் இன்றுகாலை இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்ததோடு, மர நடுகைப் பாடல் இறுவட்டையும் வெளியிட்டு வைத்தார்.
   இந்நிகழ்வில், வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், மற்றும் திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
'ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்' என்ற தொனிப்பொருளில் வடமாகாண சுற்றாடல் அமைச்சால் கார்த்திகை 1ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் வடமாகாண மரநடுகை மாதத்தில் இவ்வாண்டுக்குரிய கருப்பொருளாக 'ஐந்து மாவட்டங்கள் ஐந்து இலட்சம் மரக்கன்றுகள்' என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.