சுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேச்சுரத்தில் நடந்த நவராத்திரித் திருவிழா !

பேர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் கொடியேற்றத்துடன் நவராத்திரித் திருவிழா ஜோராக கொண்டாடப்பட்டது.
பேரழிவுக் காலத்தின் முடிவின் நிறைவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பபோது விருப்பு (இச்சை) என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது அறிவு (ஞான) சக்தியும் தோன்றின் பின் செயல் (கிரியா) சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே ஒன்பது இரவு வழிபாடு (நவராத்திரி) விழாவாகி விளங்குகின்றது.
முதல் மூன்று நாளும் விருப்பு சக்தியின் தோற்றமான பெருந்தேவி அன்னை ஞானாம்பிகையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான திருமகளின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான். நிறைவு மூன்று நாட்களும் செயற்சக்தியின் தோற்றமான கலைமகளின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
இப்பெரும் வழிபாடு சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் கடந்த பெப்பிரவரி 01ம் திகதி செந்தமிழ் திருக்குடமுழுக்கு கண்டு, வான்தொட்டு நால்வர் பெருமக்கள் புடைசூழ, தமிழர் கலைவடிவம் திருக்கோபுரமாக, பெருங்கோவில் கொண்டு விளங்கும் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. ஐரோப்பாவில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக முப்பெருந் தேவியற்குத் திருவிழாவாக ஒன்பது இரவு வழிபாடும் ஞானலிங்கேச்சுரத்தில் நோற்கப்பட்டு, 21. 10. 2015 தேர்த்திருவிழா இடம்பெற்றது.
திங்கட் தேரேறிப் பெருந்தேவியார் ஒளிவெள்த்த்திற் திருவுலா எழுந்தருளினர். வெள்ளையினத்தவரும், பிறநாட்டவரும் கண்டு வியக்க, தமிழ்த் தாய்மார்களும், பெரும் அடியார்களும் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். 7 பாகை குளிரிலும் ஆயிரம் மக்கள் திரண்டு இழுத்த பனிக்காலத் தேர்த் திருவிழா சுவிசில் இதுவே முதல் முறையாகும்.
கடந்த சனிக்கிழமை குமாரிகள் (பாலதிரிபுரசுந்தரி) வழிபாடும் இனிதே இடம்பெற்றிருந்தது. 3 முதல் 9 வயதிற்குட்டப்ட செந்தமிழ்ச் செல்வங்கள் மலைமகளாகக், கலைமகளாகத், திருமகளாக திருவுருபெற்று வழிபாடு நடந்தேறிற்று.




திருக்கொலு திருக்குட உருவத்தில் அன்னை வழிபாடும், கருவறியிற் சிறப்பு வழிபாடும், திருக்கொலுவும், நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை அருளமுதாக்கிய சிறப்புத் திருத்தொண்டர் திருப்பணியும், ஞானாலிங்கேச்சுரத்தில் குடிகொண்ட தெய்வங்களைப் பலவித செந்தமிழ் ஆடல் பாடல்களால் மகிழச் செய்த செயலும் நாம் சுவிற்சர்லாந்தில்தான் இக்காட்சி காண்கிறோமே என வியப்படைய வைத்தது.

ஞானாம்பிகையின் போர் பண்டாசுரனுடன் ஞானாம்பிகை போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் ஞானலிங்கப்பெருமானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். அன்னை வன்னி மரத்தை அழித்து அசுரனை ஒழித்தாள். ஞானாம்பிகை உனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற ஒன்பது இரவுத் திருவிழா (22.10.15) நல்வெற்றித் திருநாள் (விஜயதசமி) கன்னி (வன்னி) வாழை வெட்டுடன் இனிதே நடந்தேறிற்து.

ஞானலிங்கேச்சுரத்தில் நற்செயல்கள் யாவும் தொடங்க முப்பெருந்தேவியரும் நிறைந்த அருளும் நாளாகும். இந்நிறை நாளில் பலநூறு மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு ஞானலிங்கேச்சுரத்தில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் முன்னிலையில் ஏடுதொடக்கல் முதல் இயலிசைக் கல்வி வரை தொடங்கி வைத்தனர். இதில் குறிப்பிட்டுச் சொல்வதாய் சுவிஸ் நாட்டவரும் தம் குழந்தைக்கு ஞானலிங்கேச்சுரத்தில் ஏடுதொடக்கியது பலரையும் வியக்க வைத்தது.

                                                                                                             (நன்றி: தட்ஸ்தமிழ்)