அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?: யாழ்ப்பாணத் தம்பி!

எல்லாம் அப்பவே தெரியும். திருடனின் தாயாரிட்டை சாத்திரம் கே்கிற குழு மாதிரித்தான் உள்ளக விசாரணை எண்டு எல்லாருக்கும் தெரியும். அவையள் தெளிவாய் இருக்கினம் கண்டியளே? 
 
மகிந்தவை காப்பாற்ற வேணும் எண்டுற கடமையை தலைமேல் கொண்டிருக்கினம். மகிந்தவிலை பாசத்திற்காய் இல்லை. மகிந்தவை சர்வதேச விசாரணைக்கு முன்னாலை நிறுத்தினால் இனவாத வாக்குகள் இனி வாற காலங்களிலை கிடைக்காது எண்டு.
 
அதான் மகிந்தவை தூக்கு கயிற்றிலை இருந்து நான் பாதுகாத்தன் என்று ஒருத்தர் துள்ளிக்குதித் இன்னொருத்தர் இனி மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரட்டும் இல்லை எண்டுறார். அமைச்சர் ராஜிதவோ மகிந்தவுக்கு தயாரித்த மின்சாரக் கதிரையை பஞ்சு மெத்தை கதிரையாய் மாத்தினதாய் சொல்லுறார்..
 
இப்ப இன்னொரு கதையை இலங்கை அரசே அவித்து விட்டிருக்குது. அது என்ன தெரியுமே? போர்க்குற்றங்கள் இழைத்த அரச படையளுக்கு பொதுமன்னிப்பு குடுப்பினமாம். வழக்கிலை சிக்கிற படையளுக்கு உதவுவம் என்று படையதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பிக்க வாக்குறுதி அளிச்சிருக்கிறாராம்...
 
போர்க்குற்றம் செய்த படையளை மத தலைவர்கள் என்ற கருணை குழு முன்னிலை வைச்சு பொதுமன்னிப்பு வழங்குவினமாம்.. சரி.. ஆக.. போர்க்குற்றங்கள் நடந்திருக்குது அதை ஒரு சில படையள்தான் செய்தவையள் எண்டு சொல்லி ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் மகிந்தவுக்கும் புனித பெயர் எடுக்கினம் எண்டு அவையளே ஒப்புக்கொள்ளுறினம்...
 
கிட்டடியிலை முன்னாள் புலியளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்திலை இடமிருக்கா எண்டு ஆராய்ந்த சம்பிக்க தான் போர்க்குற்றம் செய்த படையளை அரசு பாதுகாக்கும் எண்டு சொல்லியிருக்கிறார். பொதுமன்னிப்பு வழங்கிறம் வந்து சரணடையுங்கோ எண்டுதானே புலிகளை சரணடைய வைச்சவை.
 
சரணைஞ்ச இடத்திலை எத்தினை பேரை கொன்று சித்திரவதை செய்தவை. அவையள்தானே இண்டைக்கு போர்க்குற்றங்களாகவும் இனப்படுகொலையாகவும் உலக அரங்கிலை அம்பலமாயிருக்குது.
 
எத்தினை சனங்கள் கொல்லப்பட்டவை. எத்தினை குழந்தைகள்? எத்தினை பெண்களை சீரழிச்சவை? சரி இன்னும் எத்தினை பேர் காணாமல் போனவர்களாயும் சரணடைந்து மறைக்கப்பட்டவர்களாயும் இருக்கினம்?  அவையளைபற்றி மகிந்த ராஜபக்சள் எப்பிடி வாய் திறக்காமல் இருந்தினமோ? அப்பிடித்தானே இப்பவும் இருக்கினம்? 
 
எங்கடை மக்களுக்கு தெரியும் உவையின்டை விசாரணை தங்களை பாதுகாக்கத்தான் எண்டு. அது எங்களுக்கு நீதி தராது. காலம் காலமாக எங்களுக்கு இழைச்சது எல்லாம் அநீதிதானே? இன்னும் நீதி தராமல் தங்களை காப்பாற்றுகிற தங்கடை அரசியலை முன்னெடுக்கிற நடவடிக்கையை நீதி எண்டால் எப்பிடி ஒரு அமைதி வரும்? 
 
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? 
 
யாழ்ப்பாணத் தம்பி
 
 
                                                                                                                   By:GTN