அதிகரிக்கும் போலி மந்திரவாதிகள்: கனடாவில் அப்பாவி குடிமக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக பொலிசார் எச்சரிக்கை!!!

கனடாவில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளவர்களை குறிவைத்து லட்சக்கணக்கான டொலர்களை கொள்ளையடித்து வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எட்மோண்டன் மாகாணத்தில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.
மூடநம்பிக்கைகள் மற்றும் போலியான மதச்சடங்குகளை பின்பற்றி வரும் பலகீனமான மக்களை குறிவைத்து அந்த கும்பல் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற மக்களை சந்திக்கும் சோதிடர்கள், அவர்கள் மிக மோசமான சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை நீக்கி வாழ்க்கையில் சுபிச்சம் உண்டாக வேண்டுமெனில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான டொலர்களை பறித்து வருகின்றனர்.
எட்மோண்டன் மாகாணம் மட்டுமின்றி, கனடாவில் கல்கேரி, வான்கூவர், டொரோண்டோ, சஸ்காடூன் உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த போலி சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை சுமார் 2,000 டொலர் முதல் 15,000 டொலர் வரை அப்பாவி குடிமக்கள் பணம் இழந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர் மட்டும் சுமார் 85,000 டொலர்கள் வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர் புகார்கள் கிடைத்த நிலையிலும், போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் சுற்றுலா பயணிகள் போல கனடா நாட்டிற்கு வருகின்றனர்.
இந்த மந்திரவாதிகளை குறித்து ரகசிய தகவல்கள் வெளியே கசிந்தால், இருக்கும் இடம் தெரியாமல் தப்பி விடுவதால், பொலிசார் அவர்கள் நெருங்க முடியாத சூழல் நிலவி வருகிறது.


எனினும், சந்தேகத்திற்குரிய சாமியார்கள்ம் சோதிடர்கள் பணம் பறிக்க முயற்சிப்பதாக குடிமக்களுக்கு தெரியவந்தால், அவர்களை பற்றி உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.