யாழில் சர்வதேச விசாரணை கோரி கையெழுத்து போராட்டம்!!!

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்களைபுரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறையை வலியுறுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளக விசாரணை பொறிமுறையினையும், விசாரணையையும், உறுதிபட நிராகரிக்கின்றோம் என்ற கோரிக்கையினை முன்வைத்து யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்  மற்றும் மதத்தலைவர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.

இதேவேளை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நேற்று வவுனியாவில் குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.