போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

(புகைப்படம்: தினமணி) 
தமிழக சட்டசபையில் நேற்று(16) காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம்!

காலை 10.50 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார். 

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால், ‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவசர முக்கியத்துவம் வாய்ந்த தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறார். எனவே கேள்வி நேரம் இத்துடன் முடித்துக்கொள்ளப்படுகிறது’ என்றார். 

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். தீர்மானத்தை முன் மொழிந்து அவர் பேசியதாவது:-

இலங்கையில் இனப்படுகொலை


இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது, மனித உரிமை மீறல் உள்பட பல்வேறு மனிதாபிமானமற்ற செயல்கள் அடங்கிய குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்தது. 

நட்பு நாடா?

இதன் அடிப்படையில், இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; இலங்கை முகாம்களில் இருந்த தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்வதோடு அனைத்து குடியுரிமைகளையும், தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மாமன்றத்திலே 8.6.2011 அன்று என்னால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்திடவும்; ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் என்னால் 27.3.2013 அன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்


இது மட்டுமல்லாமல், இலங்கை நாட்டில் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான கூட்டம் மற்றும் காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆகியவற்றை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்; பெயரளவிற்கு கூட இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான, நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, இந்திய பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்திலே என்னால் 24.10.2013 அன்று கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்போதைய மத்திய அரசு செயல்பட்ட போது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து 12.11.2013 அன்று இதே பேரவையிலே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நான் நிறைவேற்றினேன். 

இது மட்டுமல்லாமல், இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், தமிழ்நாட்டில் நடத்தப்படக்கூடாது என்றும்; தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் விளையாட்டு போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஐ.பி.எல். அமைப்பாளர்களை வற்புறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று நான் அப்போதைய பாரத பிரதமரை 26.3.2013 அன்றைய தேதியிட்ட கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன்.

வெற்றி


இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை ஐ.பி.எல். அமைப்பாளர்கள் அளித்தால் மட்டுமே ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகள், தமிழ்நாட்டில் நடைபெற தமிழக அரசு அனுமதிக்கும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.

எனது வேண்டுகோளினைப் பரிசீலித்த ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு, சென்னையில் நடைபெற இருக்கும் விளையாட்டு போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவை எடுத்தது. அது இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எனது தலைமையிலான அரசின் வற்புறுத்தலுக்கு கிடைத்த வெற்றி.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2012-ம் ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு முன்பு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, அப்போதைய மத்திய அரசை நான் வலியுறுத்தினேன். 2013-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு முன்பு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தபோது, அதற்கு வலுவூட்டும் விதமாக இந்திய பேரரசு என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டும் என்பதை கோடிட்டுக்காட்டி அப்போதைய பாரத பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

இயற்கை நீதிக்கு முரண்


மேலும், 2013-ம் ஆண்டு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியபோது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இந்த ஆண்டு கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்போதைய மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. 

இதன் விளைவு, தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இலங்கை உள்நாட்டு போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து இலங்கை நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு முன்பு, எந்த அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததோ, அந்த அமெரிக்கா தற்போது இலங்கை போர்க்குற்றத்திற்கு உள்நாட்டு அளவில், அதாவது இலங்கை அரசே குற்றவாளிகளை விசாரித்து நடவடிக்கை எடுத்தால் போதும் என்ற கூற்றை தனது வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் மூலம் முன் வைத்து இருக்கிறது. இதற்கேற்றாற் போல், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு முன்பு ஒரு தீர்மானத்தினை அமெரிக்கா கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது இயற்கை நீதிக்கு முரணானதாகும்.

வடக்கு மாகாண தீர்மானம் 


பிரதமர் என்னை 7.8.2015 அன்று எனது இல்லத்தில் சந்தித்தபோது, 19 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்தேன். அதில் கோரிக்கை எண் 17-ல், இலங்கை உள்நாட்டு போரின் போது, அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்து ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர, சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.

10.2.2015 அன்று, இலங்கை வடக்கு மாகாண சபையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டது குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டால் நீதி கிடைக்காது என்பதால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரனால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டில் 21.2.2002 முதல் 15.11.2011 வரை இலங்கை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த சுதந்திரமான, சர்வதேச விசாரணை முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், இலங்கை வடக்கு மாகாணத்தை தங்களுடைய தாய் வீடாக கருதும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்கும் வண்ணமும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலகெங்கும் பரவி இருப்பதை கருத்தில் கொண்டும், சர்வதேச சமுதாயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில், உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 1.9.2015 அன்று இலங்கை வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

மனித உரிமை குழு


அந்த தீர்மானத்தில், சர்வதேச குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே விசாரணை மேற்கொள்வது என்பது நீதியை பரிகசிப்பது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களை காத்து அவர்களுக்கு சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முக்கியமான தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி நியாயம் வழங்க தவறிவிட்டன என்றும் தெரிவித்து, நீதி கிடைக்கும் வகையிலும், அர்த்தமுள்ள இணக்கப்பாதையில் இலங்கை நாடு செல்லும் வகையிலும், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொள்வதோடு, சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை நாட்டு தலைவர்கள் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டம் 14.9.2015 முதல் 2.10.2015 வரை நடைபெறுகிறது. 30.9.2015 அன்று இலங்கையில் இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடமை பற்றிய மனித உரிமை குழுவின் ஆணையர் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படும். வரைவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை 1.10.2015 மற்றும் 2.10.2015 ஆகிய தேதிகளில் எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச விசாரணை


இலங்கை உள்நாட்டு போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவினுடைய அறிக்கை மீது இலங்கையின் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இலங்கை அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் இலங்கையே போர்க்குற்றங்கள் பற்றி விசாரித்துக்கொள்ளலாம் என்ற ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் நிறைவேற்றக் கூடிய சூழல் தற்போது எழுந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு உண்டு.

இந்த சூழ்நிலையில், போர்க்குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு மூலம் இந்திய பேரரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இந்த மாமன்றத்திலே நிறைவேற்றப்படுவது அவசியம் என நான் கருதுகிறேன். இதைத் தான் ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்பார்க்கிறது.

எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், கீழ்க்காணும் தீர்மானத்தினை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் முன்மொழிகிறேன்.

ராஜதந்திர ரீதியில்...


“ஒரு லட்சியத்தைப் பெறுவதும், அதனை ஈடேற்ற எத்தகைய தியாகம் செய்யவும் தயாராகி விடுவது என்ற உள்ள உரம் பெறுவது என்பதும் சாமான்யமான காரியமல்ல. அந்த சாதனையில் நாம் வெற்றி வாகை சூடுவோம் என்ற திட நம்பிக்கை இருத்தல் வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் அமுதமொழிக்கு ஏற்ப, ஒட்டுமொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களுக்கும் வலுசேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்ட வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கேட்டுக்கொள்கிறது. 

என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பின்னர், இந்த தீர்மானத்தினை ஏகமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று உறுப்பினர்களை தங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஒருமனதாக நிறைவேற்றம்


தொடர்ந்து பாண்டியராஜன் (தே.மு.தி.க. அதிருப்தி), துரைமுருகன் (தி.மு.க.), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) பிரின்ஸ் (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), எர்ணாவூர் நாராயணன் (ச.ம.க.), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி) ஆகியோர் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள். சபாநாயகர் தனபாலும் ஆதரித்து பேசினார். 

பின்னர் இந்த தீர்மானத்தை பேரவையின் முடிவுக்கு விடுவதாக சபாநாயகர் கூறினார். இதில் எதிர்ப்பு எதுவும் இல்லாததால் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.