ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு!!!

காக்கா முட்டை திரைப்படத்தைப் பற்றி இணையத்தளங்களில் நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருந்ததால், காக்கா முட்டை திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னுள் அதிகமாக இருந்தது. இப்படியான எதிர்பார்ப்புகளை அதிகம் வளர்த்துக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்த்து ஏமாந்த நிலைகளும் இருந்திருக்கிறன. அந்த ஐயத்தோடு இந்தப் படத்தைப் பார்த்த பொழுது நிலைமை வேறு விதமாகவே இருந்தது.
சின்னப் படம். சிறிய முதலீடு, இரண்டு சிறுவர்கள்தான் கதையின் நாயகர்கள். கதை கூட சின்னதுதான். கதைக்குத் தேவையில்லாத கதை ஓட்டத்தை இடைநிறுத்தக் கூடிய எந்தக் காட்சிகளும் இடம்பெறாத வண்ணம் சின்னச் சின்ன விடயங்களிலும் சிரத்தை எடுத்து அழகாகத் தந்திருக்கிறார்கள்.
யதார்த்தம் என்ன என்பதை இந்தப் படம் சொல்லி வைக்கிறது. தென்னிந்திய தமிழ்ப் படம் இதுதான் என்ற முத்திரையை இது மீறியும் இருக்கிறது.
படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டு உடையைக் களைந்து அதை சமையல் பாத்திரத்திற்குள் ஒளித்து வைக்கும் (விக்னேஸ்)சின்ன காக்காமுட்டையும், 'ஏன் பாத்திரத்துக்குள்ளை ஒளிச்சு வைக்கிறாய்? பேசாமல் இரும்புப் பெட்டிக்குள்ளை பூட்டி வைச்சிருக்கலாமே' என்று கிண்டலடிக்கும் அண்ணனான (ரமேஸ்) பெரிய காக்கா முட்டையும், 'மூத்திர வண்டி' என்று கூப்பிட்டுக் கலாய்க்கும் (ஜஸ்வர்யாராய்) அம்மாக்காரியும், 'பெரிய மனுசனானால் தானா நிறுத்திக்கப் போறான்' என்று பேரனுக்கு ஆதரவாகப் பேசும் (சாந்திமணி) பாட்டியும் இயல்பாக வந்து போகிறார்கள்.
வறுமையில் வாடும் சிறார்கள், அவர்கள் ஆசைப்படும் பொருட்கள் கிடைக்காத பொழுது ஏற்படும் ஏமாற்றங்கள் என்ன என்பதை ஒரு பிட்சாவை வைத்து தெளிவாகத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் திருட்டு, ஏமாற்று, குறுக்கு வழி என்று எதுவும் இன்றி நேர்மையாகத் தங்கள் எண்ணத்துக்காக பாடுபடும் இரண்டு சிறார்களை வைத்து சமூகத்திற்கு நல்ல சிந்தனையைத் தந்திருக்கிறார்கள்.
கூட்ஸ் வண்டியில் இருந்து விழும் கரிகளைப் பொறுக்கி விற்றும், தண்ணீர்க்குடம் சுமந்தும், தெருச்சுவர்களைக் கழுவியும் விளம்பரத் துண்டுகளை விநியோகித்தும், குடித்து விட்டு விழுந்திருப்பவரை வண்டியில் வைத்து இழுத்து வீடு சென்று சேர்ப்பதுவும் என்று ஏகப்பட்ட வேலைகளை அந்தச் சகோதரர்கள் செய்கிறார்கள். நல்ல உடுப்பு வாங்குவதற்காக தங்கள் வீட்டு நாய்க்குட்டியை இருபத்தைந்தாயிரத்திற்கு விலை பேசும் சின்ன காக்கா முட்டையின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதிலும், 'ஒரு கிலோ கரி திறீ ருப்பீஸ்' என சின்ன காக்கா முட்டை உச்சரிக்கும் விதம் நன்றாக இருக்கிறது. அதுபோல் சிற்றி சென்ரரைப் பார்த்து வாயைப் பிளந்தபடி 'எங்களை சத்தியமா உள்ளை விட மாட்டாங்கள்' என்று தனது ஏக்கத்தைக் காட்டும் பொழுதும் மிளிர்கிறான்.
படம் முழுவதும் அண்ணனுக்குப் பின்னாலேயே தம்பி வந்து கொண்டிருக்கிறான். சிறுவன் ஒருவன் சாப்பிட்டு விட்டுத் தந்த பிட்சாவை மறுக்கும் அண்ணன், 'பேசாமல் அதையே சாப்பிட்டிருக்கலாம்' என்று சொல்லும் தம்பியை, 'எச்சில் பிட்சாவை துன்னுவியா?' என்று  கண்டிக்கும் பொழுது தன்மானம் என்ன என்பதை தம்பிக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சொல்லி வைக்கிறான்.
<p>ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு</p>
ஊரில் நடக்கும் பிரச்சினைகளை எப்படி அரசியல்வாதிகள் தங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். 'யாராவது பிரச்சினை பண்ணினால்தான் நாம போய் சோல்வ் பண்ணலாம்' என்று தனது செயலாளரிடம் சொல்லும் அரசியல்வாதி பாவாடை, பிறிதொரு கட்டத்தில் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, 'இது செய்தி அல்ல.. சாதனை. என் மக்களுக்கு கிடைத்த வெற்றி' என்று  நிலைமைக்கு ஏற்ப பேசுவதும் அரசியல்வாதிகள் இப்படித்தான் என்பதைப் புரியவைக்கிறது.
ரேசன் கடையில் அரிசி இல்லை. ஆனால் வீட்டுக்கு இலவசமாக வரும் தொலைக்காட்சி, போராட்டத்தில் பங்கு பற்றினால் நூறு ரூபாவும், பிரியாணியும் என்று அரசியலைக் கிண்டலடித்தபடி நடிகர் சிம்புவையும் உரசிப் பார்த்திருக்கிறார்கள்.
'பிட்சா கடையை நீங்கள் ஓப்பின் பண்ணினதாலைதான் புரொப்ளம் கிறீயேற் ஆச்சு என்று சொல்லுறாங்கள்' என்று சிம்புவிடம் நிருபர் கேட்டு கடுப்பேத்துவதும், 'எங்கை இன்னும் கேக்கலைண்ணு நினைச்சன்.. ரொம்ப தாங்ஸ்' என்று சிம்பு சொல்வதும் ரசிக்க வைக்கிறது.
பிரச்சினையைப் பார்த்து பயந்தோடும் சகோதரர்கள் தாய் கூப்பிடும் பொழுது எல்லாவற்றையும் மறந்து 'டேய் அம்மாடா' என்று சொல்லிக் கொண்டு தாயிடம் ஓடி வருவது மனதை நெகிழ வைக்கிறது. இப்படி சின்ன சின்ன விடயங்களை எல்லாம் சேர்த்து எங்களை ஒரு குப்பத்துக்குள் அழைத்துச் செல்கிறது காக்கா முட்டைத் திரைப்படம்.
பாட்டி சுட்ட தோசையை சாப்பிட்டுப் பார்த்து துப்பும் சின்ன காக்கா முட்டை, பின்னர் 'ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு' என்று சேர்டிபிகேற் தருகிறான்.
மணிகண்டன் இயக்கிய இந்தப் படம் நல்லா இருந்திச்சு.