மட்டு/சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம்  சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்னால் இன்று புதன்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆயுத கலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டு பிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நிதியினை நிலை நாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; கொலையாளியை விரைவாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.

அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

'எமது சக உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் 2015.05.26ம் திகதி அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து சமூக சேவை உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இத்துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினை வண்மையாக கண்டிக்கின்றோம்.

நாட்டில் வன்செயல்கள் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு துப்பாப்பிச் சூடு நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் துவானம் முடியவில்லை என்பது போல இந்நிலை காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும், சூத்திதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம்  நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன், அரச உத்தியோகத்தரிடையேயும், பொதுமக்களிடையேயும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.'