இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த-:

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத புலிக்கொடிகளை பறப்பதாக இவர் கூறுகிறார். இது இன்று இவர் கண்களுக்கு மாத்திரம் தெரிகிறது.  19ம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்பட்டதை தவிர வேறு எதுவும் கிடையாது என்றும்  இவர் கூறுகிறார். அங்கே நாம் உருவாக்கியுள்ள பதினோரு சுயாதீன ஆணைக்குழுக்களும் இவருக்கு தெரியவில்லை.

சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று மகிந்தர் கனவு காண்கிறார். ஆகவே பதவி ஆசை பித்து பிடித்து போய் நமது இந்த ஆட்சி மாறவேண்டும் என்று இவர் சொல்கிறார். நமது அரசாங்கம் ஒரு பொலிஸ் ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது என்று மகிந்தவுடன் சேர்ந்து அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ச சொல்கிறார். கடந்த ஆட்சியின் போது வெள்ளை வான் பொலிஸ் ராஜ்யத்தை தலைமை தாங்கி நடத்திய கோதாபய, இன்று நமது மைத்திரி ஆட்சியை பார்த்து, பொலிஸ் ராஜ்யம் என்று சொல்வதை கேட்டு நாம் வாய்விட்டு சிரிக்கின்றோம். இந்த நேரத்தில் வாசுதேவ நாணயக்கார நமது பக்கத்தில் இல்லையே என நான் கவலையடைகிறேன். வாசுதேவ நாணயக்கார எங்கள் பக்கம் இருந்திருந்தால், மகிந்த சகோதரர்களுக்கு உரிய பதிலை, உரிய சுந்தரமான சிங்கள சொற்களை பாவித்து அவர் அளித்திருப்பார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து முறையற்ற வார்த்தைகளால் திட்டி பயமுறுத்தியவர், மகிந்த ராஜபக்ச.  அந்த பயமுறுத்தல் சம்பாஷணையை அப்படியே எழுத்தில் தன் பத்திரிக்கையில் லசந்த பிரசுரித்தார். அதேபோல், அந்த பத்திரிக்கையின் பின்னாள் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்சை கடும் வார்த்தைகளால் பயமுறுத்தியவர், கோதாபய ராஜபக்ச. அந்த பயமுறுத்தல் வாசகங்களும் அதே பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டன. அது மட்டுமல்ல, இவர்கள் பயமுறுத்தலை தொடர்ந்து,  ஊடகவிலாளர் வீடுகளுக்கு வெள்ளை வான்களை அனுப்பியவர்கள். இவர்கள் இன்று நமது இந்த நல்லாட்சியை பார்த்து போலிஸ் ராஜ்யம் என்று சொல்வது நல்ல வேடிக்கை.

இன்று நாம் நீதிமன்றங்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம். அதனால்தான்  கோதாபய ராஜபக்ச, நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை வழக்கு தொடர்ந்து, தம்மை கைது செய்ய வேண்டாம் என்ற தாம் எதிர்பார்த்த இடைக்கால தீர்ப்பை அவரால் பெற முடிந்துள்ளது. மகிந்தவின் இன்னொரு தம்பியான பெசில் ராஜபக்சவுக்கு தடுப்பு காவலை மருத்துவமனை கட்டிலில் இருந்தபடி  கழிக்க முடிகிறது. இன்று நடப்பது நல்லாட்சி என்பதற்கும், அன்று நடந்தது காட்டாட்சி என்பதற்கும் இவற்றைவிட நல்ல உதாரணங்கள் தேவையா? மைத்திரியின் ஆட்சி நல்ல ஆட்சி மட்டுமல்ல, பெருந்தன்மை உள்ள ஆட்சி. அதனால்தான் இவர்கள் அனைவரும் இன்னமும் தப்பி பிழைத்துள்ளார்கள். தனக்கு எதிராக நின்றவர்களுக்கும் தனது ஆட்சியின் வரப்பிரசாதங்களை மைத்திரி வழங்கியுள்ளார். அதையும் வெட்கமில்லாமல் இவர்கள் அனுபவிக்கின்றார்கள். மனநோய் பிடித்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது சகோதர பிறப்புகளுக்கும், அவரை மீண்டும் ஆட்சிபீடமேற்ற துடிக்கும் கூட்டு கள்வர்களுக்கும், அவரது காலடியில் விழுந்து கிடக்கும் எடுபிடிகளுக்கும்  மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று கனவு காணவேண்டாம் என்று கூறி வைக்கின்றோம்.

                                                                                                       நன்றி: