வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைத்தேடி அகிம்சை வழி போராட்டம்!!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைத்தேடி அகிம்சை வழி போராட்டம்  ஒருநேரத்தில் வடக்கு கிழக்கு 8  மாவட்டங்களிலும் உள்ள மக்களை அழைக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு தமிழ்  ஒருங்கிணைப்புக்குழுவின் அன்பான வேண்டுகோள் ! அன்பான எம் தமிழ் உறவுகளே!

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை பல வழிகளில் நாம் எமது அடிப்படை உரிமைகளை, உறவுகளை மற்றும் அடையாளங்களை  இழந்து  இன்று மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையின் தொடர்ச்சியில் எமது மக்கள் சலிப்புற்ற நிலையில் மாற்றம் ஒன்று அவசியம் என்ற எண்ணத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்க நாம் அணைவரும் ஜனாதிபதி மைத்திரிசிறிசேனாவிற்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.  அவர்கள் தமது ஆட்சிகாலத்தில் 100 நாள் வேலைத்திட்டம், தமிழ் மக்களுக்கு பல உரிமைகளையும் பெற்றுத்தருதல், தமிழ் மக்கள் சுதந்திரமாக  செயற்படுவதற்கான சூழல், ஊடக சுதந்திரம்  போன்ற பல காரணங்களை முன்நிறுத்தி  இலங்கை மக்களின் மனத்தில் இடம்பிடித்து வெற்றிகண்டனர். 

ஆனால் தமிழ் மக்களும் அந்த வார்த்தைகளை நம்பி வாக்களித்து, அரசியல் மாற்றத்தின் பின் மீண்டும் ஏமாற்றம் அடைந்தோம். 
அதன் முதற் செயற்பாடாக தற்போதைய ஜனாதிபதியின் கீழ்  நடைபெற்ற ஜனாதிபதி விசாரனைக்குழுவின் அங்கத்தவர்களில் எவ்வித மாற்றமும் இன்றி  கடந்தமாதம்  பெப்ரவரி 28 ,மார்ச் 1,2,3 ஆகிய திகதிகளில் திருகோணமலை மாவட்டதில் விசாரணை ஆரம்பமானது. அவ்வாறே இம் முறை வரவிருந்த ஜநாவின் அறிக்கையையும் நாம் கொண்டுவந்த புதிய அரசாங்கத்தினால் பிற்போடுவதற்கான சந்தர்ப்பத்தை நாமே வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருந்தோம். 

ஆனால் இந்த புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளும் முந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் எமக்கு எந்த ஒரு சரியான தீர்வையும் பெற்றுத்தராது என்று எண்ணுவதற்கான நிலையினை உருவாக்கியுள்ளது.
ஆகவே எமக்கு இந்த ஜனாதிபதி விசாரணைகுழுவின் மீதுள்ள நம்பிக்கை இழக்கப்பட்டு மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்க காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இதேபோல 10 விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அவ்விசாரணைக்குழுவின் அறிக்கைகள் இதுவரைக்கும் சரியான முறையில் விசாரிக்கப்படாமல் இருப்பதோடு அதன் அறிக்கைகள் சரியான முறையில்  சரியான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதனாலும் எமது மக்கள் மிகவும் சோர்வுற்ற நிலையில் உள்ளதோடு இந்த புதிய ஜனாதிபதியின் மாற்றமில்லாத விசாரணைக்குழுவின் மீதும் அவர்கள் தமது நம்பிக்கையை இழந்துள்ளார்கள்.

ஆகவே தமிழ் மக்களாகிய நாம் புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்விடுப்பது யாதெனி;ல் எமது காணமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்கு என நியமிக்கப்பட்ட அதிகாரிகளிற்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்குவதோடும் அவ் விசாரணைசர்வதேச தரத்திற்கு இருக்கவேண்டும் என்றும் அது ஜநா சட்டங்களிற்கு உட்பட்டதாகவும் அவ் விசாரணையை அறிக்கை வெளியிடுவதற்கும் மட்டும் பயன்படுத்தாமல் மக்களின் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சரியான தீர்வை  பெற்றுத்தருவதற்கு ஏதுவான சந்தர்ப்பத்தை உருவாக்கித்தருமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் வெளிப்படாக நாளை திங்கட்கிழமை 23.03.2015 காலை 10.00 மணி தொடங்கி 12.00 மணிவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம் (வடமாகாண செயலகம்,கச்சேரி) கிளிநொச்சி,(செயலகம்,கச்சேரி) மன்னார் (செயலகம்,கச்சேரி) முல்லைத்தீவு(செயலகம்,கச்சேரி) வவுனியா,(செயலகம்,கச்சேரி) திருகோணமலை(கிழக்கு மாகாணம் செயலகம்,கச்சேரி)  மட்டக்களப்பு (செயலகம்,கச்சேரி)  ,அம்பாறை செயலகம்,கச்சேரி)  போன்ற மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர்களிடம் எமது மனு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆகவே சிவில்சமூகம், பொதுமக்கள், பொதுஅமைப்புக்கள் அரசியல்வாதிகள், மதகுருமார்கள் மாணவர்கள்  அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்மக்களின் எழுச்சியை இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கு ஐ.நாவிற்கும்  வெளிக்காட்டுவதற்கு அழைக்கின்றோம்.




                                                                         இப்படிக்கு 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள்.