இன்று இலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்திய பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.
27 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை விசேட அம்சமாகும்.




இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய பிரதமர் சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர், இன்று பகல் மருதானையிலுள்ள மகாபோதி மகா விஹாரைக்கும் விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதன்பொருட்டு பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாராளுமன்ற அமர்வின்போது செங்கோலுடன், சபாநாயகர் அக்ராசனத்தில் வீற்றிருக்கும் நிலையிலும், உறுப்பினர்கள் மத்தியிலும் உரை நிகழ்த்துவதற்கான கௌரவத்தை பெறும் முதலாவது இந்திய பிரதமராக நரேந்திர மோடி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் இந்திய பிரதமர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
இதுதவிர இன்று மாலை வர்த்தக சமூகத்தினரையும்  மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.