காணமல் போன எனது மகள்- மைத்திரியுடன் 03.1.2015 அன்று தேர்தல் துண்டுப் பிரசுரத்தில்

காணாமல்போன மகளின் புகைப்படத்துடன், கண்ணீருடன் தேடியலையும் தாயொருவரின் சோகம் நிறைந்த வடுக்கள் இவை.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள்.
எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார்.
தொடர்ந்தும் அவர் விபரிக்கையில்,
அடுத்த நாள் போவதற்கு ஆயத்தமாகிய போது அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மக்கள் இல்லை என்று கூறி விட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்த போது அந்த இலக்கம் இயங்கவில்லை.
பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனவே எனது மகளை மீட்டுத் தாருங்கள் என அந்த தாய் கேட்டுக் கொண்டார்.