சம்பந்தன், மாவை, சுரேஸ், செல்வம், ஆனந்தன், பொன்.செல்வராசா பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட முடியாது! - அன்ரனி ஜெகநாதன்

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்து மக்களின் இறுக்கமான பொருளாதார வாழ்க்கையில் தளர்வுநிலையை கூட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “மூன்று தடவைகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இனி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது” என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெகநாதன் கருத்து கூறியிருப்பதானது சம்பந்தன், மாவை.சேனாதிராசா போன்ற மூத்த தலைவர்களை அவமதிக்கும் செயலாகும்.  

மூத்த தலைவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்றத்துடிக்கும் அதாவது சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கும் ஒரு சதிச்செயலாகவே இதைப்பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் மக்கள் செல்வாக்கு அற்றவர்களை வலிந்து திணித்து எப்படியாவது பாராளுமன்றதுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற குறுநல, சுய இலாப நோக்கங்களையும், நயவஞ்சக சிந்தனையையும் அடிப்படையாகக்கொண்டு அன்ரனி ஜெகநாதன் கருத்து கூறியிருக்கிறார் என்பதும் வெளிப்படையாகவே தெரியவருகின்றது.  

தான் பூடகமாக, சூசகமாக பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பில் அன்ரனி ஜெகநாதன் இவ்வாறு பேசியுள்ளார். மலையான ராஜபக்ஸவையே தாங்களாகவே முடிவெடுத்து வீட்டுக்கு அனுப்பிய மக்கள் என்ன முட்டாள்களா? இங்கு தீர்மானிப்பது கூட்டமைப்பு அல்ல, மக்கள் தான்! 

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். யார் யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். யார் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். 

அதுவரைக்கும் எம்பி எம்பி குதித்து 'எம்.பி' ஆவதற்கு அலுவல்கள் பார்க்கும், சில்லறைத்தனமான வேலைகளை நிறுத்திவிட்டு அடக்கி வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நன்றி:Puli Urumudhu