உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் பிரென்சு தேசத்தின் ஒற்றுமைக்கான ஒன்றுகூடலில் தமிழர்கள் நாமும் பங்கெடுப்போம்:- அறைகூவல்!!!

 பிரான்சு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒற்றுமைக்கான பேரணியில் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் பங்கெடுத்து பிரென்சு தேசத்துக்கான தோழமையினை வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. பிரான்சின் பல்வேறு இடங்களிலும் ஒன்றுகூடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தலைநகர் பரிசின் place de la République சதுக்கத்தில் 11-01-2015 ஞாயிறு மாலை 15மணிக்கு ஒற்றுமைக்கான பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு இந்த அறைகூவலை விடுத்துள்ளது.
   பிரென்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஓலன்ந் தலைமையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமறுன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்கல் உட்டப பல ஐரோப்பிய உலகத் தலைவர்கள் ஒற்றுமைக்கான இப்பேரணியில் பங்கெடுக்கின்றனர். பிரென்சுக் குடிமக்களாகிய அனைத்தின மக்களும் இப்பேரணியில் பங்கெடுக்கின்ற நிலையில் தமிழர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளது இக்காட்டுமிராண்டித்தனமான செயல், ஐரோப்பாவில் இஸ்லாமியர் மீதும், குடியேற்றவாசிகள் மீதும் எதிர்ப்புணர்வினை வளர்ந்துவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு என பிரான்சின் பயங்கரவாத தாக்குதலினை வன்மையாக கண்டித்து வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.