சிறிலங்காவின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்றில் பிரதம நீதியரசராகப் பதவியேற்றுள்ள மூன்றாவது தமிழரான இவர், 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
சிறிலங்காவின் 37வது பிரதம நீதியரசராக சுப்பையா சர்வானந்தா 1984ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார். பின்னர் 1991ஆம் ஆண்டில் ஹேர்பேர்ட் தம்பையா சிறிலங்காவின் 39வது பிரதம நீதியரசராக குறுகிய காலம் பதவி வகித்திருந்தார்.
அதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் ஆரம்ப கல்வியைக் கற்ற கனகசபாபதி சிறீபவன், 1976ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் முதல்தரத்தில் சித்தியடைந்தார்.
1978ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்குச் சேர்ந்த இவர், 1989ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் மூத்த சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
1996மே; ஆண்டு சிறிலங்காவின் பிரதி சட்டமா அதிபராக நியமனம் பெற்ற இவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம் தொடர்பிலான டிப்ளோமா பட்டத்தையும் பெற்ற இவர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.
2002ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட இவர், 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் முன்னிலையிலேயே சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.