ஜனாதிபதி தேர்தல் 2015 அமைதியான முறையில் நடைபெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!!!

ன்றைய ஜனாதிபதி தேர்தல் 2015 பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
தேர்தல் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக அனைத்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள், பாதுகாப்பு தரப்பினர், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பாரதூரமான அசம்பாவிதங்கள் பதினதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதனால் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்தினதும் வாக்களிப்பை சூனியமாக்க வேண்டிய தேவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று பிற்பகல் ஐந்து மணி வரை தேர்தல்கள் செயலக முறைப்பாட்டுப் பிரிவுக்கு 328 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
எவ்வாறாயினும் இதில் பெரும்பாலான முறைபாடுகள் சிறு சம்பவங்களுடனேயே தொடர்புபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று மாலை 4.30 தொடக்கம் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வாக்குகளை எண்ணும் பணிகள் ஏழு மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
இன்றிரவு 10 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் நள்ளிரவு வரை தொகுதிவாரியான முடிவுகளை வெளியிட முடியாமற்போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவு வெளியாகும் நேரம் தொடர்பிலும் தற்போது எதனையும் கூற முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.