"இன்று ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்"

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான, சர்வதேச தினம் உலகளாவிய ரீதியில் இன்று முதற்தடவையாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த வருடம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 68ஆவது கூட்டத் தொடரின்போது  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி மாலியில் பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தத் தினம் பிரகடனம் செய்யபப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 700ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் கொலைகளுக்கு பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரில் ஒரு சிலருக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய நிலைமையின் கீழ், ஊடகவியலாளர்கள் தைரியம் இழக்கும் அதேவேளை, செய்தி சேகரிப்பு நடவடிக்கையும் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

மூன்றாம் உலக நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் காமினி வியன்கொட கூறியுள்ளார்.

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மோசமடைந்து வருகின்ற இந்த நிலைமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை காணப்படவில்லை என ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.