வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் மோசடி - அதிகாரிகளிடம் முறைப்பாடு!!!

வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் மோசடி - அதிகாரிகளிடம் முறைப்பாடு:-வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு வங்கப்படும் உணவில் மோசடி குறித்து வடமாகாண பிராந்திய உலக உணவுத்திட்டத்தின் அதிகாரி க. றொய்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
 
கடந்த 20ம் திகதி அன்று வடமாகாண பிராந்திய உலக உணவுத்திட்டத்திற்கு கிடைத்த தொலைபேசி முறைபாட்டுக்கு அமைவாக உலக உணவுத்திட்ட அதிகாரிகளும் வலயக்கல்வி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து 21ம்திகதி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களுக்கு சத்துள்ள உணவுகள் உரிய அளவில் வங்கப்படாமை பொருட்கள் பாடசாலைக்கு வெளியில் வாகனத்தில ஏற்றிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை இப் பாடசாலையில் முன்னர் பணியாற்றிய அதிபர் தற்போது பணியாற்றும் அதிபரிடம் வழங்கிய கையிருப்புக்கும் பதிவேட்டிற்கும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உலக உணவுத்திட்டத்தின் அதிகாரிகள் வுவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி செ. அன்ரன் சோமராஜாவிடம் 21 ஆம் திகதியே முறையிட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறிப்பிட்ட அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் திருமதி.செ. அன்ரன்சோமராஜா, வட மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினரும் வட மாகாண கல்வி அமைச்சின் வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பின உறுப்பினருமான இ. இந்திரராஜாவிற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளரிம் கேட்டபோது உலக உணவுத்தி;ட்ட அதிகாரிகளால் வவுனியா அரசாங்க அதிபருககு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை உலக உணவுத்திட்டத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்ட பூந்தோட்டம் பாடசாலையின் முன்னாள் அதிபர் தற்போது வவனியாவின் பிரபல பாடசாலையொன்றிற்கு அதிபராக மாற்றலாகி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
       
                                                                                            நன்றி: குளோபல் தமிழ் செய்தி