27 வயதில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன வைரவநாதன் 53 வயதில் ஹம்பாந் தோட்டை தடுப்பு முகாமில்!!!

27 வயதில் 25 வருடங்களுக்கு முன்  காணாமல் போன வைரவநாதன் 53 வயதில் ஹம்பாந் தோட்டை தடுப்பு முகாமில்!கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடிதம் மூலம்  செவ்வாய்க்கிழமை 
(11.11.14) அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்;ந்த தற்போது 53 வயதாகும் கே.வைரவநாதன் என்ற நபரே, இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு வைரவநாதனும் காணாமற்போயிருந்தார். இவர் காணாமல் போனதற்கு கொழும்பில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாகியதாக கூறப்படுகிறது.

இதன் பின் இவரது பெற்றோர்கள் பல இடங்களில் அவரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் இவரது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர். வைரவநாதனும் உயிரிழந்திருப்பார் என அவரது உறவினர்கள் முடிவு செய்துவிட்டனர்.

இந்நிலையிலேயே, இவர் தொடர்பான கடிதம், செவ்வாய்க்கிழமை கிடைத்துள்ளது. வைரவநாதனை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் (சகோதரியும், சகோதரியின் கணவரும்) மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                             நன்றி: குளோபல் தமிழ் செய்தி