முன்னாள் போராளி ஒருவர் தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் ஆனந்தன் எம்பியிடம் முறைப்பாடு!!!

புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாகத் தொல்லை ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் உயிரச்சுறுத்தல் விடுக்கப்;பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளார்.
வவுனியா ஒமந்தை, கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சத்தியசங்கர் சாந்தன் என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:
கள்ளிக்குளம் சிதம்பரத்தில் வசிக்கும் சத்தியசங்கர் சாந்தன் ஆகிய நான் இத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துவது யாதெனில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை நிர்வாகப் போராளியாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின்போது, மே மாதம் 18 ஆம் திகதி படையினரால் முள்ளிவாய்க்காலில் இருந்து கொண்டு வரப்பட்டு, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், இறம்பைக்கும் ஆகிய தடுப்பு முகாம்களில் 6 மாத காலமும், பூஸா விசாரணை முகாமில் ஒரு மாதமும், சிஆர்பி சிறையில் 20 நாட்களும், வவுனியா பம்பைமடு, செட்டிகுளம் மருதமடு புனர்வாழ்வு நியைலங்களில் ஒரு வருடமும் தடுத்து வைக்கப்பட்டிருந்து 2012 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டேன்.
எனது இரண்டு குழந்தைகளும் யுத்தச் சூழலில் சுகவீனமடைந்து மரணமடைந்துவிட்டன. இந்நிலையில் அவர்களுடைய இழப்பும், என்னுடைய பிரிவும் எனது மனைவியை உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதி;ப்படையச் செய்து விட்டது. விடுதலையாகி வந்த நான் வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் செய்து வந்தேன். எனக்கு அரசாங்கமோ எந்தவொரு தனியார் நிறுவனமோ எந்தவொரு உதவிகளையும் செய்யவில்லை.
சீட் நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட தற்காலிக வீடு மலசலகூடம் என்பவற்றைக் கட்டி முடிப்பதற்காக எனது தொழிலைக் கைவிட வேண்டிய நிலைக்கு உள்ளானேன். எதுவித வருமானமும் இல்லாமல் கடன்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இந்நிலையில் நான் விடுதலையான நாளில் இருந்து இன்றுவரை பலவிதமான நெருக்கடிகளையம் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருகிறேன். பொலிஸ், இராணுவம், புலனாய்வுத்துறையினர் என்று அதிகாரிகள் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்பதும், வீடடுக்கு வந்து செல்வதும் வழமையாக .இடம்பெற்று வருகின்ற ஒரு சம்பவமாகும்.
ஆனால் அது மட்டுமன்றி இனந்தெரியாத சிலரும் என்னைப் பின்தொடர்வதும், கண்காணிப்பதும் கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. அதனை நான் பலதடவைகள் அவதானித்து என்னுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் முன்னர் இருந்த கிராமசேவையாளர், அயலவர்களிடமும் கூறியிருந்தேன். அதிகாரிகள் அதனை மேலும் அவதானிக்கும்படி கூறினார்கள்.
இரவு 11 மணிக்குப் பின்னர் எனது காணி பக்கம் மாதம் 4 தடவையேனும் மோட்டார் சைக்கிள் வந்து செல்வதை நான் கண்டுள்ளேன். ஆனால் நிறுத்தி என்னை யாரும் அழைத்ததில்லை. நள்ளிரவு நேரங்களில் நாய்கள் பலமாகக் குரைக்கும் போது நான் பார்த்ததுண்டு.
அவ்வாறே 2014 ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இரவு 9.30 மணிக்கு நாய்கள் கடுமையாகக் குரைக்கும் சத்தம் கேட்டது, வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தபோது, இரண்டு பேர் கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தார்கள். நிலவு நேரம் என்பதால் தெளிவாகத் தெரிந்தது. யாரென்றுந நான் கேட்டபோது, சாந்தன் இல்லையா என்று கேட்டார்கள். ஏனென்று கேட்க, வாங்க கொஞ்சம் கதைக்க வேண்டும் என்று மலையத் தமிழ் வழக்கில் கதைத்தார் ஒருவர்.
ஊரில் உள்ளவர்கள் யாரோ அவசரமாக வந்துள்ளனர் என்றெண்ணி நான் போனேன். எனது வீட்டு கேற் அருகில் இருந்து கதைக்கக்கூடியவாறு பலகை உள்ளது. அதில் இருந்து கொண்டு என்னையும் இருக்கச் சொன்னார்கள். ஒருநாளும் கண்டிராத ஆட்களும், குரலும் என்பதால் நான் கேட்டேன், யார் நீங்கள், என்ன அலுவல் என்று. அதற்கு உன்னுடன் கதைக்க வேண்டும் என்றார். கதைப்பதானால் நீங்கள் யாரென்று சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி, கதைக்கும் நேரமும் இதுவல்ல என்று கூறினேன். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வருவோம். நீ எல்ரீரீயில் எந்தப் படையுடன் இந்தாய்? யாருடன் இருந்தாய்? மூன்று மாதமாக வேலைக்குப் போகவில்லை நீ சாப்பிட என்ன செய்கிறாய்? வெளிநாட்டில் இருந்து காசு யார் அனுப்புவது? நீ, என்ன ஊரில் பெரிய ஆளாகப் பார்க்கிறாயோ? துள்ளுறத நிற்பாட்டு. இல்லாட்டி நாங்கள் நிற்பாட்டுவோம் என்றெல்லாம் ஆரம்பத்தில் கதைத்த அந்த ஒருவரே தொடர்ந்து கதைத்தார். மற்றவர் வாய் திறக்கவில்லை.
அவருடைய எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்லாமல், நீங்கள் யாரென்று சொல்லாமல் நான் எதையும் சொல்ல வேண்டியதில்லை. என்னுடைய விபரம் அனைத்தும் இருக்க வேண்டிய இடங்களில் இருக்கின்றது. நான் ஆமி பொறுப்பதிகாரியிடம் இதுபற்றி சொல்கிறேன் என்ற சொன்னபோது, நீ எந்த கேணலிடம் போய் சொன்னாலும், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் நாங்கள் யாரென்று நீயாக அறிந்து கொள்வாய் என்றும் என்னுடைய விபரம் அனைத்தும் தாங்கள் வைத்திருப்பதாகவும், என்னுடைய தொலைபேசி இலக்கத்தையும் கூறி, சரியா என்று கேட்டார். அதன் பிறகும் நான் அடையாள அட்டை கேட்டபோது, சில்வர் நிற கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டினார். அது உண்மையானதுதானா என்று உற்றுப் பார்த்தபோது, சந்தேகப்பட வேண்டாம் என்று கூறி, மகசினைக் கழற்றி குண்டையும் கழற்றி காட்டினார்.
இதைக்காட்டிப் பலனில்லை. அடையாள அட்டைதான் வேண்டும் என்று சொன்னேன். அதுமட்டுமன்றி மற்றவர் கதைக்கமாட்டாரா என்று கேட்டதற்கு அது உனக்குத் தேவையில்லை. வாயை மூடிக்கொண்டிரு. ஊன்னுடன் கதைத்துக் கொண்டிருக்க நாங்கள் வரவில்லை. முடித்துவிட்டுப் போகத்தான் வந்தோம் என்று கூறினார். அமைதியாக இருப்பதானால் இரு. உன்னை நாங்கள் நாலைந்து மாதமாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களை இன்னொரு தடவை வர வைக்காதே என கூறிவிட்டு பத்து மணியளவில் இருவரும் நடந்து எனது காணிக்கு தென்மேற்கே உள்ள காணிக்குச் சென்றார்கள்.
அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பதை அறிய நான் எனது காணியின் பின்பக்கமாகச் சென்று பார்த்தபோது, இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார்கள். நான் உடனடியாக மறைந்து கொண்டேன். அந்த நேரம் யாருக்கும் போன் பண்ணவோ, என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கவோ என்னால் முடியாமல் இருந்தது. மறுநாள் காலையில்தான் இது தொடர்பில் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்தேன்.
வந்தவர்கள் அயலில் ஆட்கள் எவரும் இல்லையென்பதை நன்கு அறிந்து வைத்துள்ளனர். கேற்றடியில் பலகை இருந்ததையும் முன்னர் அவதானித்து உள்ளனர். புதிதாக வந்த ஒருவரால் அவ்வளவு இலகுவாகச் செயற்பட முடியாது. இரவு நேரம் என்பதால் இருவருடைய முகம்களும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் திடகாத்திரமாக இருந்தார்கள்.
இது தொடர்பில் முறைப்பாடு செய்ய மாமடு பொலிஸ் நிலையம் சென்றபோது, ஒஐசி கதை முழுவதையும் கேட்டுவிட்டு, ஏன் உடனடியாக வரவில்லை? நாங்கள் யாரை எங்கு போய் பிடிப்பது? இந்த முறைப்பாட்டை எழுதியும் பிரயோசனமில்லை என்று கூறிவிட்டு, என்ன செய்யலாம் என்று கேட்டதுடன், ஊர் மக்களிடம் கூறி, யாரும் வந்தால் பிடிக்க முயற்சி செய்யலாம் என்று கூறினார்.
இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் முறைப்பாடு செய்யச் சொன்னார்கள் என்று சொன்னதற்குப் பின்னர், மேற்படி கிராமம் தமது பகுதியில் இல்லையென்று சொல்லி, ஓமந்தைக்குச் செல்லும் வழியும் கூறி, ஓமந்தை பொறுப்பதிகாரியின் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். அதன்படி, இன்று காலை ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, ஓஐசி இல்லையென்றும், இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள் என்றால் எப்படி முறைப்பாடு எழுத முடியும்? பொலிசார் சிவில் உடையில் ஆயுதத்துடன் வரமாட்டார்கள். வந்தவர்களுக்கு அடித்திருக்கலாம். ஆல்லது மோட்டார் சைக்கிளுக்குக் காற்றைத் திறந்துவிட்டிருக்கலாம் என்றும் கேட்ட துணை பொறுப்பதிகாரி, எங்களது கிராமம், தங்கது பகுதிக்குள் இல்லையென்றும், மாமடுவுக்குப் போகும்படியும் இல்லையென்றால், நாளைக்குக் காலையில் வந்து ஓஐசியுடன் கதைக்கும்படியும் கூறினார்.
மேற்படி சம்பவம் தொடர்பில், பொலிசார் முறைப்பாடு எடுக்க மறுப்பதும், இராணுவமும், புலனாய்வு பிரிவும் முறைப்பாட்டினை கட்டாயம் செய்யும்படி கூறுவதும், என்ன காரணத்திற்காக என்று எனக்குப் புரியவில்லை.
என்னைச் சுற்றி என்னவோ மிகப் பெரிய ஆபத்தான விடயம் இருப்பதாக எனக்குப் புலப்படுகின்றது. ஊரில் யாருடனும் சண்டையா? ஊரில் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? ஏன்று கேட்கிறார்கள். யாரையும் சந்தேகப்பட வேண்டிய தேவை எனக்கி;ல்லை. ஏனென்றால், வந்தவர்கள் கடையில் வாங்கக்கூடிய அல்லது தாமாக் தயாரிக்கக்கூடிய பொருளுடன் வரவில்லை. அதுமட்டுமன்றி, நீண்டகால அவதானிப்பின் பின்னரே அதுவும் ஊரில் ஆட்கள் குறைவான இரவு நேரத்தில் வந்துள்ளனர். அதிகாரிகள் யாராவது வருவதானால், நேரம் இருக்கிறது. அவ்வாறு இரவில் வருவதானால், அடையாள அட்டையை அவர்கள் காட்டியிருக்கலாம். ஆயுதத்ததைக் காட்டி, மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை.
விடுதலையாகி வந்த நாள் தொடக்கம், மேற்படி இடத்திலேயே நான் வசித்து வருகிறேன். என்னுடைய தொலைபேசி இலக்கம் உட்பட, எனது சகல விபரமும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கொடுத்துள்ளேன். வவுனியாவைவிட்டு நான் எங்கும் சென்றதில்லை. வேலைக்குச் செல்லும் நாட்கள் தவிர, அதிகாரிகள் வரும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நான் அவர்களைச் சந்திக்கத் தவறியதில்லை. எனக்கு மேற்படி இடம் தவிர, வேறிடங்களில் காணி, வீடு எதுவுமில்லை. எனக்கு இந்த இடத்தைவிட்டு போகவும் விருப்பமில்லை.
ஆனால் மேற்படி சம்பவத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பின்னர் எனக்குப் பயமாக இருக்கின்றது. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே, தயவு செய்து தாங்கள் இதற்கொரு முடிவினைப் பெற்றுத் தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமன்றி, இக்கடிதம் தங்கள் பார்வைக்கு கிடைக்கும்போது, நான் கொல்லப்படவோ அல்லது கடத்தப்படவோ சந்தர்ப்பம் அதிகம் இருப்பதாக நான் நம்புகிறேன்.
இங்ஙனம்,
சத்திய சங்கர் சாந்தன்.

நன்றி: ஊடகம்.கொம்