தமிழகத்தில் 3 நாட்கள் சிறுநீரைக் குடித்து வாழ்ந்தேன்... மறுபிறவி பெற்றேன்.. கண் தானம் செய்ய ஒடிசா வாலிபர் முடிவு !!!

சென்னை: சென்னைக் கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப் பட்ட ஒடிசா வாலிபர் தனது கண்களைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று மாலை இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதில் போரூர் மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 53ஐ தொட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 நாட்களுக்குப் பிறகு ஒடிசா வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப் பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த வாலிபரின் பெயர் பிரகாஷ்குமார் ராவ் (25) எனத் தெரிய வந்துள்ளது. இடிபாடுகளுக்கிடையே சிக்கி தான் பட்ட கஷ்டங்களை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் பிரகாஷ்குமார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒரே இருட்டு... கட்டிட விபத்து ஏற்பட்ட போது நான் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தேன். கட்டிடம் சரிந்த நிலையில் நான் இருந்த அறையில் உள்ள ஒரு சிலாப்பில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக் கொண்டேன். இருட்டைத் தவிர வேறு எதுவும் என் கண்ணில் தெரியவில்லை.
காப்பாற்றுங்கள்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உதவிக்காக காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூப்பிட்டபடியே இருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சிறுநீரைக் குடித்தேன்... எனது வயிறு பசித்தது. நாக்கு உலர்ந்தது. ஆனால், உணவுக்கு வழியில்லை. தொண்டை வறண்டு போன நிலையில் எனது சிறுநீரை நானே குடித்தேன்.
மறுபிறவி... உயிர் பிழைப்பேன் என கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் இப்போது உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் அது கடவுள் செய்த அதிசயம் தான். இது எனக்கு மறுபிறவி.
கண்தானம்... உள்ளே இருந்த சமயத்தில் மேலே மீட்பு பணிகள் நடைபெற்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். எனக்கு இது மறுபிறவி என்பதால் என்னுடைய கண்கள் இரண்டையும் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய இரண்டு கண்களும் நான் இறந்த பிறகு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி: தட்ஸ்தமிழ்