யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது யாழ்.பல்கலைக்கழகம்: நடந்தது என்ன?

யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
(நிழற்படம் - தமிழ் விக்கிப்பீடியா)
மூடப்படுவதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படாதபோதும் மாணவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடப்படும் திகதிவரை நிறுத்தப்படுகின்றன என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுதியைவிட்டு வெளியேறுமாறு பதிவாளர் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி செயற்பாடுகள் 21ம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்றும், விடுதி மாணவர்கள் 20ம் திகதி 20ம் திகதி நண்பகல் அல்லது 12 மணிக்குப் பின்னர் விடுதிக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கென அவர்களைப் பலாலி படைத்தளத்துக்கு வருமாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் மே 17,18 ஆம் திகதிகளில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறு காரணம் இன்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது