யாழில் வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு –04/05/2014

யாழ்/மானிப்பாய்,உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், ஞாயிற்றுக்கிழமை (04.05.14) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இந்த பதிவுகள் இடம்பெற்றதாக யாழ். படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே இந்தப் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் படைத் தலைமையகம் குறிப்பிட்டது. இந்த செயற்றிட்டத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 17 மற்றும் 27ஆம் திகதிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பதிவுகளின் போது அவற்றை மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் பங்குகொண்டோரின் மூலப்பிரதிகளை திருப்பிக் கொடுக்காது தம்முடன் எடுத்துச் சென்றனர். இந்த ராணுவ ஆட்பிடிப்புக்கும் பதிவுகளுக்கும் பின்னணியில் இருக்கும் நல்லிணக்க மையத்தின் முக்கியஸ்தர்களாக தம்மை இணைய உலகின் ஜாம்பவான்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் சில தமிழ் தரகர்கள்,  செயற்படுகின்றனர். சந்தியிலும் மதகுகளிலும் சும்மா இருக்கும் இளைஞர்களின் மீது பரிதாபப் பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கப்போவதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் இவர்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்காக வடக்கின் இளைஞர் யுவதிகளை மூளைச் சலவை செய்து பாதுகாப்பு தரப்பினரின் அடிமைகளாக தரைவார்கின்னறனர் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த துடிக்கும் பாதுகாப்பு தரப்பினரால் தமிழ் பெயர்களை கொண்ட தரகர்களை முன்னிலைப் படுத்தி உருவாக்கப்பட்ட நல்லிணக்க மையம் ஏனைய அமைச்சுக்கள் மூலம் ஏன் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது எனக் கேள்வி கேட்டால், பாதுகாப்பு அமைச்சிடம் தான் பணம் இருக்கிறது… அவர்களால் தான் சம்பளம் கொடுக்க முடியும் என அதற்கு தட்டுத் தடுமாறி பதில் கூறுகிறார்கள். ஆயின் சட்டத்துறையாகிய பாராளுமன்றம், அரசாங்கம் அதன் அமைச்சுக்களை தாண்டி பாதுகாப்பு அமைச்சா நாட்டை ஆளுகிறது? பாதுகாப்பு அமைச்சிடம் உள்ள பணம் அரவாங்கம் ஒதுகீடு செய்யாமல் அதன் செயலாளர் தனது குடும்பச் சொத்திலா பணத்தை பாதுகாப்பு அமைச்சில் முதலிட்டு இருக்கிறார்? என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக துறைசார்ந்த அமைச்சுக்கள் ஊடாக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆளும் அரசாங்கங்களின் ஏக பிரதிநிதியாக கடந்த 20 வருடத்திற்கு மேலாக மிகச்சிறந்த எஜமானர் விசுவாசத்துடன் செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கிறார். வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திர குமார் இருக்கிறார். யாழ் மாநகரத்தை ஆளும் யோகேஸ்வரி பற்குணம் இருக்கிறார். அண்மையில் மாகாண சபை உறுப்பினராக பதவி ஏற்ற தவராசா இருக்கிறார். இவர்களை விடவும் நம்பிக்கையானவர் என தமது ஆளும் கட்சியின் உறுப்பினராக்கி மாகாண சபை உறுப்பினராக தரம் உயர்த்திய அங்கஜன் ராமநாதன் இருக்கிறார்.இவர்கள் ஊடாக அல்லது மத்திய அமைச்சரவைகள் ஊடாக வேலைவாய்ப்பை வழங்காது, தம்மால் புதிதாக களமிறக்கப்பட்ட தரகர்களின் ஊடாக அவர்களின் இணையப் பிரச்சாரங்கள் ஊடாக, ஒலிபெருக்கி அறிவித்தல்கள் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் எதற்காக யாழ்ப்பாணத்தில் ஆட்பிடிக்க வேண்டும்? எனப் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். விவசாயம், பண்ணைத் தொழிலுக்கு ஆட்சேர்பதாயின் விவசாய அமைச்சு இருக்கிறது. கட்டடம், மேசன் வேலை, தச்சுத் தொழில், உள்ளிட்ட வேலைகள் ஆயின் கைத்தொழில், வானிபம், சிறு கைத்தொழில், கட்டட நிர்மானம் சமூக சேவைகள் அமைச்சு என அமைச்சுக்கள் இருக்கின்றன. இவற்றின் ஊடாக விண்ணப்பங்களை விநியோகிக்காமல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அதன் தரகர்களால் இயக்கப்படும் தனியார் நிறுவனங்களிடம் ஆட்சேர்ப்பை எவ்வாறு வழங்க முடியும்? என கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. மொத்தத்தில் யாழ் குடாநாட்டையும் முழு இராணுவ மயப்படுத்தலுக்குள் கொண்டுவருவதற்கு தமிழ்த் தரகர்களையும் அவர்களின் ஊடகங்களையும் முழுமையாக பயன்படுத்தி, இலங்கை அரசாங்கமும் அதனை இயக்கும் பாதுகாப்பு அமைச்சும் திட்டமிட்டு செயற்படுவதாக யாழ்ப்பாணத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் கவலை வெளியிட்டு உள்ளனர்.