தராக்கி சிவராம், ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு !!!

ஊடகப் பணியின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்கள் மிக நெருக்கடியான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றியிருந்த நிலையில் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வினை யாழ்.ஊடக சமுகம் தொடர்ச்சியாக நடத்திவருகின்றது. இந்நிலையில் யாழ்.ஊடக அமையம் படுகொலை செய்யப்பட்ட இரு ஊடகவியலாளர்களின் நினைவு தினத்தை இன்றைய தினம் அனுஷ்டித்துள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி அஞ்சலி நிகழ்வில், குடாநாட்டு ஊடகவியலாளர்ளினால் மலர் அஞ்சலி மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டதுடன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் இ.சபேஷ்வரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் ஆகியோர் சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவுரைகளை நிகழ்த்தியுள்ளனர்.