அரசு படுகொலை செய்த மூவரின் சடலங்களும் - அதன் பின்னால் உள்ள உண்மைகளும் அடக்கமாயின

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புலிகளின் தலைவர்களான கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டன. இதனை காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.

அநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.

நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கும், இறுதிக்கிரியைகளில் அவர்கள் பங்குபற்றுவதற்கும், அவரவர் கலாசாரத்திற்கமைவாக கிரியைகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஆயினும் காவல்துறையின் ஏற்பாடுகளுக்கமைவாக, இந்த இறுதிக்கிரியைகளில் இறந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

கோபி என்று படையினரால் குறிப்பிடப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் மாமனராகிய செகராசசிங்கம் பாலகுருபரன், கஜீபனின் சடலத்தைப் பார்வையிட்ட போதிலும், இறுதிக்கிரியைகளில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறிய அவர் தனது மகளும், கஜீபனின் தாயாரும் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது பற்றிய தகவல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
கோபி என்று அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடல் அடையாளம் காட்டப்பட்டதாம்:-
நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்று அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடலை, பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவருடைய தாயார் செல்வநாயகம் இராசமலர், அவருடைய மனைவி கஜீவன் சர்மிளா ஆகியோருடன், அவருடைய மாமனாராகிய செகராசசிங்கம் பாலகுருபரன் ஆகியோர் அடையாளம் காட்டியிருக்கின்றனர்.

நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லபட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் நேற்று வியாழக்கிழமை மாலை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்று பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரின் அனுமதி பெற்று செல்வநாயகம் கஜீபன் என்ற தனது மருமகனுடைய உடலைப் பார்வையிட்டதாக திருகோணமலை பாலைக்குழியில் உள்ள செகராசசிங்கம் பாலகுருபரன் தெரிவித்தார்.

கஜீபனின் உடலில் இடது கை, நெஞ்சுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் அடிவயிறு ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், தான் சென்று பார்ப்பதற்கு முன்பாக, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள் சர்மிளா மற்றும், கஜீபனின் தாயார் ஆகியோர் அழைத்து வரப்பட்டு, அவர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் பாலகுருபரன் கூறினார்.

இயக்கச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட கஜீபன் தனது மகள் சர்மிளாவை அவர் திருகோணமலைக்கு வந்திருந்தபோது விரும்பி திருமணம் முடித்திருந்ததாகவும், திருமணத்தின் பின்னர் அவர் மூன்று ஆண்டுகள் சவூதி அரேபியாவில் தொழில் செய்ததாகவும், பின்னர் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் அவருடன் தங்களுக்குத் தொடர்பில்லாமல் இருந்து இப்போது அவரை சடலமாகக் கண்டதாகவும் பாலகுருபரன் கூறினார்.

பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதால், கஜீபனின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று பொலிஸார் தமக்குத் தெரிவித்ததாகவும், தமது மகளும், கஜீபனின் தாயாரும் மீண்டும் பூஸா முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கஜீபனின் மாமனாராகிய பாலகுருபரன் தெரிவித்தார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருடைய சடலங்கள், அவர்களுடைய உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதா இல்லையா, என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.


                                                              செய்தி: குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு