வன்னியை பீடித்த சுற்றிவளைப்பு தேடுதல் காச்சல் யாழ்ப்பாணத்திற்கும் பரவியது !!!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வன்னியை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்கள் பரவியுள்ளது. அவ்வகையில் வட்டுக்கோட்டை மற்றும் மாவடிப்பகுதிகள் (21.03.14) முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தேடுதலில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் (22.03.14)அன்று காலை முதல்  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தருமபுரத்தில்  பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து   நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் வீடுகளுக்குள் உள்நுழைந்து உரிமையாளர்கள்  இல்லாத வீடுகளின் கதவுகளை உடைத்தும் சோதனைகளை நடத்தியுள்ளனர். ஆயிரத்திற்கும்  அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அத்துடன் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்  வெளியிடங்களுக்கு செல்ல இராணுவத்தினர் தடை  விதித்துள்ளதாகவும் வெளியிடங்களிலிருந்து செல்லும் வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2008 இற்கு முன்னதான சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களது கள சூழல் மக்களிடையெ பலத்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.