தன் இனத்தை அழித்த யானையைக், கொசு கொல்லுமானால்,தமிழனால் சிங்களத்தை வெல்ல முடியாதா? -யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் !!!

ஓர் பெரிய மரத்தின் கொப்பில் ஓர் கொசுக்கூட்டம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஓர்நாள் அந்த மரமருகே வந்த யானை,தன் பெலனைக் காட்ட,கொசுக்கள் இருந்த அந்தக் கிளையை உடைத்து தன் காலில்போட்டு மிதித்தது. அதனால் அந்தக் கொப்பிலிருந்த கொசுக்கள் மடிய,ஒரு கொசுமட்டும் தப்பிப் பறந்து கவலையுடன் இருந்தது. தன் இனத்தை அழித்த யானையை எப்படியாவது கொல்லவேண்டும் எனும் வைராக்கியத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டது. அந்தக் கொசுவுக்கு ஒரு எறும்பு நண்பன். அந்த எறும்பு நண்பனிடம் கொசு தன் கவலைகளைக் கொட்டி,அந்த யானையை எப்படியாவது கொல்லவேண்டும் என்றது. அந்த எறும்போ கொஞ்சம் யோசித்துவிட்டு,எனக்கு ஒரு தவளை நண்பன் இருக்கிறார்,அவரிடம் கூறினால் அவர் யோசனை சொல்வார் என்றது. எனவே கொசுவும்,எறும்பும் தவளையிடம் சென்று,கொசுவின் சோகக் கதையைக் கூறி,அந்த யானையைக் கொல்ல உதவவேண்டும் என்று கூறின.

அந்தக் கதையைக்; கேட்ட தவளை கொஞ்சம் யோசனை செய்துவிட்டு,ஆம் நாம் மூவரும் உறுதியாகச் செயற்பட்டால்,யானையைக் கொல்லலாம் என்று கூறி, செயற்படும் முறையையும் கூறியது. அதன்படி ஒருநாள் அந்த யானை அந்த மரத்தடியில் வந்தபோது,கொசுக்கள் கூட்டமாகப் போய் அதன் இருகண்களுக்குள்ளும் மொய்த்தன. ஆதனால் யானையால் ஒன்றும் பார்க்க முடியவில்லை. உடனே எறும்புகள் கூட்டமாக யானையில் ஏறி,அதன் இரு காதுகளுக்குள்ளும் சென்று குடையத் தொடங்க,யானை வலியால் கதறியது. உடனே தவளை பள்ளத்தாக்கில் நின்று கத்தியது. தவளைச் சத்தத்தைக் கேட்ட யானை,அருகே தண்ணியுள்ளது,அதில் கண்களைக் கழுவுவோம் என எண்ணி,மூடிய கண்களுடன் தவளைச் சத்தம் வந்த திசைநோக்கி நகர,அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து இறந்தது.

இது ஒரு முன்னைய கதை என்றாலும்,ஒரு கொசுவின் வைராக்கியத்திற்கு இவ்வளவு சக்திக்கான வாய்ப்பு உண்டென்கில்,கங்கை முதல் கடாரம் வரை வென்று ஆட்சி செய்த தமிழனின் வைராக்கியத்திற்கு எத்தனை சக்திகள்,வாய்ப்புகள் இருக்கும்.

தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு,தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள்,தெரிந்துகொண்டே,எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக்கொண்ட கரும்புலிகள்,இறுதிவரை உறுதியுடன் மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள்,இவர்கள் அத்தனைபேரையும் சூழ்ந்து நின்று,கடைசிச் சொட்டு நீருக்கும் தலைவணங்காமல்,உயிர்துறந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள்,இவர்கள் அனைவரும்; தமிழீழ விடுதலைக்காகத் தவம் செய்த துறவிகள். இந்தத் துறவிகளின் தியாகம் தமிழன் நெஞ்சில் வைராக்கியத்தை ஏற்படுத்தவில்லையா? அந்த வைராக்கியம் எமக்கு வெற்றியைத் தராதா?

முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னர்,இருண்டுபோனது ஈழத்தமிழர் எதிர்காலம் என ஒரு சிலர் ஒப்பாரி வைத்தாலும், ‘தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்|| என்ற வீர முழக்கத்துடன், மானத்தமிழர் புலத்தில் நடத்திய அறப்போராட்டங்கள் எம் இனத்தை விடுதலைப் பாதையில் நிறுத்தியுள்ளது. இன்று,விடுதலை எனும் வீரமுழகத்துடன் ஐரொப்பிய நகரெங்கும்,இந்தக் கடும் குளிரிலும்,எம்மினத்திற்கு நீதி கேட்டு நடைபயணம்,ஊர்திப் பயணங்களை மேற்கொள்ளும் தன்மானத் தமிழர்களைப் போற்றுகின்றோம். அவர்களின் தியாகத்திற்குத் தலைவணங்குகின்றோம். அவர்கள் செல்லும் பாதையெங்கும் அவர்களை வரவேற்று.எமது நீதிக்காய்க் குரல்கொடுப்போம்.

புலத்தினிலே நாம் சோர்ந்துவிடாது இருக்க,எம் இனத்திற்கு நடந்த கொடுமையை உலகம் மறந்துவிடாது இருக்க,எமது விடுதலை எனும் இலட்சிய நெருப்பு அணைந்துவிடாது இருக்க,என்றோ ஒருநாள் தமிழீழம் மலரும் எனும் உறுதியுடன்,இம்மாதம் 10.03.2014 திங்கட் கிழமை கடல் அலைபோல் ஐ.நா முன்றலில்,முருகதாசன் திடலில் ஒன்று திரள்வோம். இந்த உலகின் காதுகளில் ஓங்கி முழங்கி எமக்கான நீதியை சனநாயக முறையில் கேட்போம்.
தமிழினமே இன்றைய நிலையை உணர்ந்து,உடனே செயல்படு.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.