கிளி/தர்மபுரத்தில் மேடையேற்றிய நாடகத்தை வீதிநாடகமாக வீடுவீடாக தொடரும் படையினர் !!!

தர்மபுரம் சம்பவத்தின் எதிரொலி வீடுவீடாக படையினர் சோதனை. வரலாற்று சிறப்பு மிக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமும் சோபை இழந்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் முசுரன்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள ஜந்தாவது வீட்டில் கடந்த 13-03-2014 அன்று இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து வன்னியில் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக தற்போது படையினர் வீடுவீடாக சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மக்களின் வீடுகளுக்கு செல்லும் படையினர் குடும்ப பதிவு அட்டைகளை பார்த்து அனைவரும் இங்கு உள்ளனரா? குடும்ப பதிவு அட்டையில் பெயர்கள் உள்ளவர்கள் தவிர வேறு யாராவது வீட்டில் இருக்கின்றனரா? என்றெல்லாம் சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து இங்குள்ள உறவினர்கள் வீடுகளுக்கு புதிதாக வந்துள்ளவர்கள் மற்றும் பதிவுகள் இன்றி வன்னியில் வசிக்கின்றவர்கள்  பிரதேசங்களில் உள்ள படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு படையினரின் வீதி சோதனைகள் இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில் நாளைய தினம்(17-03-2014) நடைபெறவுள்ள வன்னியில் வரலாற்று சிறப்புமிக்க தர்மபுரம் முசுரன்பிட்டி கிராமத்திற்கு மிக அருகிலுள்ள புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் சோபை இழந்து காணப்படுவதாகவும் வழமைபோல் இறுதி திருவிழாவுக்கு முன்னதாக ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,வியாபாரிகளும் எதிர்பார்த்தது போன்று வரவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.


                                                                         
                                                       குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி.