பிள்ளையை தேடிச் சென்ற கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றனர் - மனைவி சாட்சியம் !!!

இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தமது பிள்ளையை தேடிச் சென்ற தனது கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றதாக யாழ். அரச செயலகத்தில் பெண்மணி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது. அதில் சாட்சியமளித்த ஐயம்பிள்ளை பூரணம் என்ற பெண் தனது சாட்சியத்தில்,

மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்த தன்னுடைய மகன் ஐயம்பிள்ளை நிரூபன் (வயது 20) என்பவரும் அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி மானிப்பாய் கஜபா முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். தமது பிள்ளை பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்பதற்காக மானிப்பாயில் உள்ள கஜபா முகாமிற்கு சென்ற தன்னுடைய கணவன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இருதய நோயாளியான தனது கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்தப் பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தனது மகனை இராணுவத்தினர் உடுவில் இராணுவமுகாமிற்கு கொண்டு சென்றிருப்பதாக தான் தெரிவித்தாக வேறு எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சாட்சியமளித்ததாகவும் தனது மகனுடன் பிடிக்கப்பட்ட மற்றைய இளைஞர்கள் இருவரும் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.