ராதிகா சிற்சபைஈசன் அடுத்த தேர்தலில் தோல்வியை பெறுவது உறுதி!, அவரது அகங்காரம் அதற்கு வழி செய்யும்!!!

தமிழர் தாயகம் சென்று வந்த கனடிய பாராளுமன்ற உறுப்பினர், ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தமிழக தொலைக்காட்சிக்கு அருவருக்கத்தக்க செவ்வியை வழங்கியிருக்கின்றார்.

முதலாவது, அங்கு வாழும் அதிகமானவர்கள் தனித் தமிழீழம் வேண்டாம் என , தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கின்றார். ஆக அங்கு வாழும் மக்கள் அவரிடம் ஆங்கிலத்தில் [ one country with two nation ] கூறியதாக தெரிவித்திருக்கின்றார். இப்படி எத்தனை தமிழர்கள் உங்களிடம் ஆங்கிலத்தில் கூறினார்கள்?. ஒரு நாடு இருதேசம் என்பது யாருடைய கருத்து என்பது அனைவரும் அறிவீர்கள். சிலர் தான் தனி நாடு கேட்கின்றார்களாம், பலர் வேண்டாம் எனத்தான் தன்னிடம் கூறினார்களாம் என தமிழர்களின் விடுதலைக்கு ஆப்பு வைத்திருக்கின்றார் ராதிகா.

அது மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்கள் வெற்று வீரம் பேசுபவர்கள் உண்மையான உதவிகள் செய்வது அல்ல எனவும் கூறியிருக்கின்றார். புலம்பெயர் மக்கள் உதவி செய்யவில்லை என கூறும் ராதிகா தனது சொந்த பணம் இதுவரை எவ்வளவு அந்த மக்களுக்கு கொடுத்திருக்கின்றார் என கணக்கு காட்டுவாரா?,

இது வரை அந்த மக்களுக்கு என்ன வேண்டும் என யாருமே கேட்கவில்லையாம், தானே போய் கேட்டாராம் இது எப்படி இருக்குது?. தான் கேட்கும் போது, உணவும் வேலையும்தான் கேட்டார்களாம், அங்கு பறிபோகும் நிலங்கள் பற்றி கேட்கவில்லை, அங்கு காணாமல்ப் போன உறவுகள் பற்றி கேட்கவில்லை, இழந்திட்ட உரிமைகள் பற்றி கேட்கவில்லை, இப்படி வேறு எதையுமே அவர் தன்னடைய நேர்காணலில் குறிப்பிடவில்லை. அங்கு வாழும் மக்களுக்கு தேவையானதை புலம்பெயர் மக்கள் அறிந்திருக்கவில்லை என கூறும் அவரே, கனடா மற்றும் இந்தியா அரசின் உதவிகள் தமிழ் மக்களை சென்றடைவதில்லை என கூறியிருக்கின்றார்.

அதாவது மிகப்பெரும் வல்லரசுகளே நேரடி உதவிகள் செய்ய முடியாத போது, சாதாரண புலம்பெயர் மக்கள் மட்டும் எப்படி காத்திரமாக வெளிப்படையாக அங்கு வாழும் மக்களின் தேவை அறிந்து முழுமையாக உதவிட முடியும்.

அது மட்டுமல்ல ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து தமிழர்கள் போராடவில்லையாம், தமிழர்கள் எவ்வளவு வேற்றுமை, வெறுப்புகள், இருப்பினும், எங்களின் நோக்கம் ஒன்றுதான், எங்களின் இலக்கு ஒன்றுதான் என கூறியிருக்கின்றார்களே தவிர, தமிழர்களின் மானத்தை ராதிகா போல் தொலைக்காட்சியில் தொலைத்தவர்கள் அல்ல. காரணம் அது மிகவும் அநாகரீகமானது.

அது போல் எனக்கு வாக்கு போட்டு வெற்றி பெற வைத்தது தமிழர்கள் மட்டுமல்ல வேற்று இன மக்களும்தான், எனக்கு வந்த மிச்ச ஓட்டு எங்கிருந்து வந்தது என ஆணவமாக கேட்கின்றார். சொற்ப தொகை தமிழர்கள் வாழும் பகுதியில், தமிழர்களின் வாக்குகள் என்னை வெற்றி பெற வைக்கவில்லை என பகிரங்கமாகஅறிவித்திருக்கின்றார்.

தான் பெற்ற 18 ஆயிரம் வாக்குகளில் தமிழர்கள் வாக்கு வெறும் 6 அல்லது 7 ஆயிரம் தான். தமிழர்களால்தான் நான் வென்றேன் என்று சொல்பவர்களும், நான் எனக்கு விளம்பரம் தேடுகின்றேன் என்று சொல்பவர்களும் விளங்காதவர்கள்தான் என் கீழ்த்தரமான வார்த்தைகளில் தொலைக்காட்சியில் தமிழர்கள் பற்றி தரக்குறைவாக பேசும் ராதிகா, ஒன்றை முற்றிலும் மறந்துவிட்டார், அதாவது அந்த 6 அல்லது 7 ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் இவரது வெற்றியை பெற வைத்தது என்பதை மிக இலகுவாக மறைத்துவிட்டார். அது மட்டுமல்ல தமிழர்களே தனக்கு எதிராகவும் வேலை செய்தார்கள் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

140,000 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியில் இவர் பெற்றது 18 ஆயிரம் வாக்குகள் என்றால், மிச்சம் உள்ள 122,000 ஆயிரம் மக்களின் வாக்கு எங்கே சென்றது என இந்த ராதிகாவுக்கு தெரியுமா? 122,000 ஆயிரம் வாக்குகள் மிச்சம் இருந்தும் எப்படி எதிர்க்கட்சி வெற்றி கொள்ள முடியாமல்ப் போனது? இந்த சிறு கணக்கை கூட அறியாத ராதிகாவுக்கு மக்கள் வாக்கு அளித்தது அவர்களின் தவறுதான். அடுத்த தேர்தலில் தமிழர்கள் வாக்கு வேண்டாம் என சவால் விட்டு தேர்தலை சந்திக்க இவர் தயாரா?

வேற்று இன மக்கள் வாக்கு போட்டது நீங்கள் இருக்கும் கட்சிக்காக மட்டும்தானே அன்றி உங்களுக்காக அல்ல என்பதை இவர் எப்போது உணர்வார், ஆனால் தமிழர்கள் உங்களுக்காக மட்டும்தான் வாக்கு போட்டார்களே அன்றி உங்கள் கட்சிக்காக அல்ல ராதிகா அவர்களே, அப்படிப்பட்ட அவர்களுக்கு சிறந்த மதிப்பை தொலைக்காட்சியில் வழங்கியிருக்கின்றீர்கள்.

இன்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இப்படியே அகங்காரம் கொண்டு இவர் செயற்படுவாராக இருந்தால் வரும் தேர்தலில் ராதிகா தோற்பது உறுதி. சிங்கள பயங்கரவாத அரசின் சில அடக்குமுறைகளை மட்டும், ஏற்கனவே உலகம் அறிந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்த மட்டும் உதவியிருக்கின்றார். அதை அன்றி வேறு எதையும் சாதித்ததாக தெரியவில்லை. தான் புலனாய்வாளர்களால் துரத்தப்பட்டதையும், அங்கு எங்கும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதையும், இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதை தவிர்த்து, தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை பற்றி ஏன் வாய்திறக்கவில்லை?. பலர் போர்க்குற்ற விசாரனை வேண்டும் என கூறுகின்றார்கள் என கூறினாரே தவிர, சர்வதேச போர்க்குற்ற விசாரனை வேண்டும் என அவர் தான் நினைப்பதாக கூறவில்லை. இனப்படுகொலை பற்றி பல நாட்டு தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்கள் அறிவித்துள்ள போதும் இவர் ஏன் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை?.

இனியாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், வலியையும் உணர்வுபூர்வமாக அறிந்தவர்களை தேர்ந்தெடுங்கள் கனடா மக்களே!



குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒளிப்பதிவாக வலைத்தளங்கில் உள்ளது, அனைவரும் பார்க்கலாம், இங்கே நாம் எழுதிய முக்கிய குற்றச்சாட்டு புள்ளிகள் அனைத்தும் அவருடைய வாயில் இருந்து வெளிவந்த வார்த்தைகள்தான்.

செய்தி : ஈழதேசம்.கொம் இணையம்