போர்களத்தில் ஒரு பூ என்கிற தலைப்பில் இசைப்பி;ரியாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது !!



ஈழத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பி;ரியாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘போர்களத்தில் ஒரு பூ’ என்கிற தலைப்பில் இசைப்ரியாவின் வாழ்க்கையை படமாக எடுத்து வரும் இயக்குனர் கணேசன், கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றியவர். இவர் தமிழில் இயக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான முக அமைப்புடன் எந்த கதாநாயகியும் கிடைக்கவில்லையாம். அப்படியே பொருத்தமான முக அமைப்புகள் இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கினார்களாம். கடைசியாக அனு என்கிற புதுமுகம்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் .
‘முதலில் இசைப்ரியாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எனக்கு எதுவும் தெரியாது இயக்குநர்தான் அவங்களைப் பற்றி எனக்கு விவரமாகச் சொன்னார். சில வீடியோக்களையும் எனக்கு காண்பித்தார். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதை விட ஷூட்டிங்கில் நடிக்கும்போதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் வலிகளை என்னால் உணர முடிந்தது. உண்மையான ஒரு போர்களம் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்குத் தெரிந்தது ஷூட்டிங் நடக்கும் இடங்கள் எல்லாம். சில இடங்களில் என்னையும் அறியாமல் அழுது இருக்கிறேன். நடிக்கிற எனக்கே இப்படி என்றால் நிஜத்தில் அந்த கொடுமைகளை எல்லாம் அனுபவித்த இசைப்பிரியாவும் அந்த மக்களும் எவ்வளவு வலிகளைத் தாங்கியிருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் எனக்கு உணர்த்தியது. எனக்கு கிட்டதட்ட இசைப்ரியாவின் மீது ஒரு அளவு கடந்த ஒரு பற்றையும் மரியாதையும் இந்தப்படம் எனக்கு தந்து இருக்கிறது,’ என்றார் அனு.
தன்னை எல்லோரும் இசைப்ரியா என்றே அழைப்பதால், இப்போது யார் தன் பெயரைக் கேட்டாலும் இசைப்பிரியா என்றே கூறிவிடுகிறாராம் அனு. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அவரது குரலில் இசைப்ரியா பற்றி ஒலிக்கும் ஒரு பாடலை கேட்டு கண்கலங்கிவிட்டார்களாம் படக்குழுவினர்.