பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள்!!!

மன்னார் மாந்தைப் பகுதியில் மனிதப்புதைகுழிகள் என்கிற செய்தி, ஊடகங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. தோண்டுதல் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பித்தபோது சிறுமி ஒருவரின் உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், நீதி விசாரணைக்கு அகப்படாமல் புதைக்கப்பட்டால், அதனை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று சர்வதேச நீதி நியமங்கள் கூறும். இது குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டால், இனவழிப்பு என்று அர்த்தப்படும். அதைச் சொல்வதற்கு, படிப்பாளிகளும் (scholars) , அறச்சீற்றக் கவசம் அணிந்தவர்களும் சங்கோஜப்படுகிறார்கள்.
போர் நடைபெற்ற பூமியில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது புதிய விடயமல்ல.. இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்னமும் எத்தனை புதைகுழிகள் மறைந்து கிடக்குமென்பதை, அதனைத் தோண்டியவர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
இருப்பினும், கூட்டுப்படுகொலைகள் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்தகவு அதிகம் இருப்பதாகவே, கண்டெடுக்கப்படும் வயது வேறுபாடற்ற, கைகள் கட்டப்பட்ட உடல் எச்சங்கள் புலப்படுத்துகின்றன.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை இனவழிப்பின் சாட்சியங்கள் புதைக்கப்படிருக்கின்றன. சனல்4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இளம் யுவதிகள் கூட்டம், எங்கே என்று தெரியவில்லை.
இதற்கான விசாரணையை நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக முன்னெடுத்து, தென்னாபிரிக்கா போல, இன நல்லிணக்கத்தை உருவாக்கி விடலாமென்று சிலர் எண்ணலாம். இலங்கை அதிபரை நெல்சன் மண்டேலா போன்று சித்தரிக்க முயலலாம். ஆனால் அரசியல் யதார்த்தம் இதற்குப் பொருத்தமாக இங்கு இல்லை என்கின்ற உண்மையை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
நடந்தது மனிதாபிமான யுத்தம் என்றும், ஒரு பொது மகனும் கொல்லப்படவில்லை என்று இந்த அரசு முயலுக்கு மூன்று கால் கதை பேசும்போது, நல்லிணக்கத்தை எந்தக் குழியில் தேட முடியும்?. மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களின் புதைக்கப்பட்ட உடலங்களை பல தடவைகள் தோண்டி எடுத்து ஆய்வு செய்தும் இன்னமும் நீதி கிட்டவில்லை. சன்சொனிக் கமிஷன் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆணைக்குழுக்களைப் பார்த்து, இலங்கையில் ஜனநாயகம் உயிர்வாழ்கின்றது என்று பெருமை பேசிய நாடுகளும் உண்டு. LLRC ஐ பாராட்டியபடியே பலர் அரசியல் செய்கிறார்கள்.
பாதுகாப்புப் படையினரால் இந்த அழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்கிற குற்றச்சாட்டு எழும்போது, அரச இயந்திரத்தின் முக்கிய அங்கம் என்ற வகையிலும், அதியுச்ச அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் முப்படை என்ற வகையிலும், அதற்கான முழுப் பொறுப்பினை அதிபரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அரசியலுக்கான அறம். அது இலங்கையில் இருக்கிறதாவென்று இருள்மிகுந்த மறைவிடங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.
நாங்களும் சுயாதீன விசாரணையை மேற்கொள்ள மாட்டோம், நீங்களும் அதுபற்றி பேச வேண்டிய அவசியமில்லை, இறைமை மிக்க நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட உங்களுக்கென்ன உரிமை இருக்கிறதென, கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயமெதற்கு என்கிற பழமொழியை நீதியமைச்சர் ஹக்கீம் அவர்கள், அரச தலைவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
போப்பாண்டவரைச் சந்திப்பதாலும், நெல்சன் மண்டேலாவின் வாரிசுகளை வைத்து உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுக்களை அமைப்பதாலும், பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாசின் ஆதரவினைப் பெறுவதாலும், எதுவும் மாறிவிடப்போவதில்லை.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் ஆதிக்கப்போட்டியில் சிக்குண்டு போகாமலிருக்க இதுவரை உதவிய தந்திரோபாயங்கள், இனிமேலும் பலனளிக்கப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், சர்வதேச அரங்கில் மேற்குலகிற்கு எதிரான சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்தும் நிலைப்பாட்டினை மகிந்த ராஜபக்ச எடுக்க முயல்கிறார்.
அதேவேளை, தூதரக அதிகாரி தேவயானியின் விவகாரத்தால், அமெரிக்க- இந்திய இராஜதந்திர உறவு நிலை சீர்குலைந்து சிதைந்து விட வேண்டுமென்கிற நப்பாசையும் இலங்கை அரசிற்கு உண்டு.
நாடாளுமன்ற தேர்தல் காலமாதலால், தேவயானியின் பிரச்சினையை வைத்து தம்மை தேச பக்தர்களாகக் காட்டிக்கொள்ள காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாகவும் ஒரு விமர்சனம் உண்டு.
ஆகவே, இந்தியாவில் ஆட்சி மாறமுன், தற்போதைய ஆட்சியாளரின் ஆதரவுடன், மார்ச் ஜெனீவா தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டுமென இலங்கை அரசு அவசரப்படுகிறது.
பேச்சளவில், சில உயர்நிலை அதிகாரிகளாலும், இராஜதந்திரிகளாலும் உச்சரிக்கப்படும் ‘சுயாதீன சர்வதேச விசாரணை’ என்பது, வருகிற மார்ச்சில் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் முன்வைக்கப்படலாம் என்கிற அச்சம் அரச உயர் மட்டத்தில் ஏற்பட்டுவிட்டது போல் தெரிகிறது.
அனைத்துலகின் ஆதரவினைத் திரட்ட, இராஜ கீரியும், அதன் படைபரிவாரங்களும் எட்டுத்திசைகளிலும் பயணித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.
மறுபுறமாக, ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் மார்சியவாதிகளும், ஒட்டுமொத்தப் புரட்சிக்கனவினைச் சுமந்தவாறு கோமா நிலையில் இருப்பவர்களும், புலி எதிர்ப்பு பிரசங்கிகளும் , அதிகாரங்களைப் பகிர்ந்தால் நாடு உடைந்துவிடும் என்று சப்புக்கொட்டுபவர்களும், தம் பங்கிற்கு, தம்மாலான அரச ஆதரவு பரப்புரைகளை சர்வதேச மட்டத்தில் ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் தரப்பில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று பார்த்தால், எழுத்தாளர் தீபச்செல்வன் சொல்வது போல, ‘அரசியல்இயக்கம்’ ஒன்று உருவாகுவதற்கான எதுவித அறிகுறிகளும் தென்படவில்லை.
படிப்பாளிகள், படிப்பாளிகளோடு பேசுகிறார்கள். மக்கள் அதனை வேடிக்கை பார்க்கின்றார்கள். அவ்வளவுதான்.
- இதயச்சந்திரன்