ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் காலமானார்!!!


ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார்.


ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்திருக்கிறார்.


ஈழத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய தென்பாங்கு நாட்டுக்கூத்து விற்பன்னர் அண்ணாவியார் இராசேந்திரன் அவர்களின் மகனான டேவிட் ராஜேந்திரன், தந்தையின் வழியில் பல நாட்டுக்கூத்துக்களில் நடித்ததுடன், நாடக நடிகராகவும் பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கினார்.


டேவிட் ராஜேந்திரன் அவர்கள் கதாநாயனாக நடித்து இலங்கை முழுவதிலும் மேடையேறி பெரு வெற்றி பெற்ற சிலப்பதிகாரத்தைத் தழுவிய கோவலன் கண்ணகி காவியத்தின் அடிப்படையில் அமைந்த 'முத்தா மாணிக்கமா' என்ற நாட்டுக்கூத்து மற்றும் 'சத்தியவான் சாவித்திரி' இசை நாடகம் ஆகியன இவரது கலைத்திறனை கலை உலகுக்குப் பறைசாற்றியிருந்தன.


வானொலி நாடக நடிகராவும் புகழ்பெற்றிருந்த டேவிட் ராஜேந்திரனுக்கு அளப்பரிய பெருமை தேடிக் கொடுத்த 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் இலங்கையில் மாவட்ட - பிராந்திய ரீதியில் மட்டுமல்லாது, தேசிய விருதுகளையும் அள்ளிக் கொடுத்து அவரது கலைச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.


பிரான்ஸ் தலைநகர் பரிசில் இயங்கி வந்த ரிரிஎன் என்று அழைக்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி இணையம் தொலைக்காட்சியிலும் பணியாற்றிய டேவிட் ராஜேந்திரனின் திறமைக்கு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புதினக் கண்ணாடி' நிகழ்ச்சி மற்றும் ஒரு சான்றாகும்.


ரிரிஎன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவிலும் கடமையாற்றிய டேவிட் ராஜேந்திரனின் அயராத உழைப்பினால் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையும் மெருகூட்டப்பட்டது.


அன்னாரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 30ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளன.