தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தது இலங்கை துணை இராணுவக் குழுக்கள் - விக்கிலீக்ஸ் தகவல்

vikiதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஈ.பி.டி.பி.யின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அரசாங்கம் கருணாவை பயன்படுத்தி தங்களை கொலை செய்யும் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளது. 2005ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை ஈ.பி.டி.பி.யின் ஒத்துழைப்புடன் கருணா கொலை செய்ததாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாவின் படையினரே பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் இந்தக் குறிப்பை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கத் தூதரகம் குற்றம் சுமத்தியிருந்தது. கடத்தல்கள் மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாக யாழ்ப்பாண அருட்தந்தை வணக்கத்திற்குரிய பேர்னாட் அடிகள் குற்றம் சுமத்தியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.