கனகராயன்குளத்தில் தொடர் களவு - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

வன்னியில் கனகராயன்குளத்தில் தொடர் நடக்கும் தொடர் களவுகள் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன. தனியார் வீடுகளிலும் அரச அலுவலகங்களிலும் என்று கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 12 களவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 14மே; திகதி ஒரே நாளில் நான்கு இடத்தில் களவுகள் இடம்பெற்றுள்ள சம்பவம் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் கனகராயன்குளம் பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டில் பகற்கொள்ளை நடந்துள்ளது. வேலைக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு கள்வர்கள் பகலில் இலக்கு வைக்கின்றனர்.  
தனிப்பட்டவர்களின் வீடுகளில் நடந்த இந்த களவுச் சம்பங்களைத் தொடர்ந்து சில அரச அலுவலகங்களிலும் களவுகள் இடம்பெற்றுள்ளன. கிராம சேவகர் அலுவலகம் உடைக்கப்பட்;டு களவுச் சம்பவம் இடம்பெற்றதோடு மீள் எழுச்சி திட்ட அலுவலகமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் களவுகள் இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. இரவுப் பொழுது மாத்திரமன்றி எப்பொழுதும் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் வசிப்பதாகவும் இப்பகுதி மக்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்கள்.
கிராம சேவகர் அலுவலகம் மற்றும் மீள் எழுச்சி திட்ட அலுவலகம் போன்றவற்றுக்கு அருகிலேயே காவல்துறை நிலையம் அமைந்திருப்பதாகச் சொல்லும் மக்கள் இந்தக் களவுச்சம்பங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்